ஓபிஎஸ்சுக்கு ஹைகோர்ட் வைத்த "செக்.." பொதுக்குழுவில் பங்கேற்காவிட்டால் எடப்பாடி கோர்ட்டை அணுகலாம்
சென்னை: புதிதாக கூட்டப்படும் அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்க மறுத்தால், எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தை நாடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
Recommended Video
சென்னையில் கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி திட்டமிட்டபடி பொதுக் குழுவை நடத்தலாம் என்று தீா்ப்பளித்தாா். இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயா்நீதிமன்றமே, 2 வாரங்களில் விசாரித்து தீா்வு காண உத்தரவிட்டது.
ஓபிஎஸ் முறையீடு
இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து ஆகியோா் சாா்பில் முறையிடப்பட்டது. இதனைத்தொடா்ந்து, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா்.
நீதிபதி ஜெயச்சந்திரன்
இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பாா் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் விசாரித்தாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , இந்த வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.
நீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. அதில், அதிமுகவில் ஜூன் 23க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாள்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனிக்கூட்டம் கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுக்குழு கூட்டம்
அதேபோல் 5ல் இரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அதற்கு ஓ.பன்னீர் செல்வம் மறுப்பு தெரிவித்தால் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தை நாடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல் புதிதாக கூட்டப்படும் பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொதுக்குழுவை கூட்ட முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வகையில் பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவாகும். ஆனால் யார் கண்டது. நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும்.