உடைந்த அதிமுக கூட்டணி! பாஜகவுடன் சேரும் ஓ பன்னீர் செல்வம் அணி? சென்னையில் ஆலோசனை.. பரபர பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது முறிந்துள்ளது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் 2 மணிநேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருந்தன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் அண்ணா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவில் அதிமுக வெளியிட்ட தீர்மான அறிக்கையில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே தான் அதிமுக தலைவர்களை தொடர்பு கொண்டு பாஜக மேலிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்பதை உறுதி செய்தார்.
இதுதொடர்பாக அவர், ‛‛பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும். 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணி விவகாரத்தில் பாஜக தரப்பில் எந்த அழுத்தமும் தரப்படவில்லை. பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அல்லது பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவோ எங்களுக்கு ஒரு அழுத்தமும் தரவே இல்லை'' என்றார்.
இதன்மூலம் அதிமுக-பாஜக கூட்டணி என்பது முறிந்துபோய் உள்ளது. இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக புதிய கூட்டணி அமைத்து களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. திமுக, அதிமுக கூட்டணியில் இணையாத பிற கட்சிகளை சேர்த்து மூன்றாவது அணியை தமிழகத்தில் கொண்டு வர பாஜக திட்டமிடலாம் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று மாலையில் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திடீரென்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், குப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கி இந்த கூட்டம் 8 மணியை தாண்டியும் நடந்து வந்தது. இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதாவது தற்போது தமிழ்நாட்டில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துள்ளது. இதனால் பாஜக தங்களுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது. அப்படி பாஜக அழைப்பு விடுத்தால் என்ன முடிவு எடுக்கலாம்? கூட்டணியில் இணைந்தால் எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம்? என்பது பற்றியும் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications