ஜெ. மரண விசாரணை.. அடுத்த சம்மன் ரெடி.. விஜயபாஸ்கருக்கு நேரம் சரியில்லை!
ஜெ.மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக உள்ளார் விஜயபாஸ்கர்
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நேரம் சரியில்லை... அடுத்த விசாரணைக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது. இது ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனுப்பப்படும் சம்மன் ஆகும்.
குட்கா வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்களை அனுப்பி கடைசியாக 4 நாட்களுக்கு முன்பு வந்து போனார். இப்போது வரை சிபிஐ அதிகாரிகளிடம் அமைச்சர் என்ன பேசினார், என்ன தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைத்தன என்பதெல்லாம் தெரியவில்லை.
எனினும் விசாரணை நடைபெறும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்று சந்தித்து விட்டு வந்தார். அந்த விவரமும் இன்னும் வெளிவரவில்லை.

இறுதி கட்டம்
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை சூடுபிடித்துள்ளது. அது தற்போது இறுதி கட்டத்தையும் தொட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதா சம்பந்தப்பட்ட உறவினர்கள், சசிகலா உறவினர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சிகிச்சை அளித்த மருத்துவமனை என எல்லாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர்
இதில் முக்கியமான சாட்சியாக உள்ளது விஜயபாஸ்கர்தான். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் டாக்டர் என்ற முறையிலும், விஜயபாஸ்கர் உடன் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த கருத்தை பல அமைச்சர்களும் ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தனர்.

குட்கா விசாரணை
அதனால் இது சம்பந்தமாக அமைச்சரிடம் விசாரிக்க இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆணையத்தில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் விஜயபாஸ்கர் குட்கா விசாரணையில் உள்ளதால், இது சம்பந்தமாக நேரில் ஆஜராகவில்லை. அதனால் அடுத்த வாரம் அமைச்சருக்கு ஆணையம் சம்மன் அனுப்பும் என தெரிகிறது.

முதல் நபர்
மார்ச் 6, 2017 அன்றைய தினத்தில், அதாவது அதிமுக இரண்டாக பிரிந்து கிடந்தபோது, விஜயபாஸ்கர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஒரு விசாரணை என்றால் அதில் முதல் நபராக விசாரிக்கப்படுபவர் ஓ.பன்னீர்செல்வமாகத்தான் இருக்கும்.

அவருக்கு தெரியும்
காரணம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளையும் பற்றி பொறுப்பு முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நன்கு அறிந்தவராக இருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 19-வது நாளே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தரப்பட்டது. அவருக்குத் தெரியாமல் எந்தவொரு சிகிச்சையும் ஜெயலலிதாவுக்கு தரப்படவில்லை." என்று சொல்லி இருந்தார்.

அடுத்த வாரம்
இதனால்தானோ என்னவோ, ஓ.பன்னீர்செல்வத்துக்கும் விரைவில் ஆணையம் சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது. ஆனால் விஜயபாஸ்கரிடம் விசாரணையை முடித்த பிறகுதான் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் அடுத்த வாரம் இருவரிடம் விசாரணை நடத்துவது உறுதி என தெரிகிறது.

நிறைய தகவல்கள்
சிகிச்சையின்போது, பொறுப்பு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததாலும், சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்ததாலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நிறையவே தகவல்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications