அரசு பங்களாவை காலி செய்த ஓபிஎஸ்...வாஸ்து நாளில் புது வீட்டில் குடியேறினார் - எங்கே தெரியுமா
அரசு பங்களாவை காலி செய்து விட்டு புது வீட்டில் குடியேறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
சென்னை: பத்தாண்டு காலமாக குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு சென்னையில் புதுவீட்டுக்கு மாறியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். வாஸ்து தினமான இன்று சென்னை திநகர் கிருஷ்ணாசாலையில் நடிகர் சிவாஜி இல்லம் அருகே உள்ள வீட்டில் குடியேறியுள்ளார்.
ஆட்சிகள் மாறும் போது காட்சிகள் மாறத்தானே செய்யும், அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதிமுக கடந்த 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த காரணத்தினால் அமைச்சர்கள் அரசு பங்களாவில் வசித்து வந்தனர்.
அப்பவே அப்படி.. ஆசிரியைகளை கூட விட்டுவைக்காத ராஜகோபாலன்..
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாக்களில் வசித்து வந்தனர்.
மாறிய ஆட்சி
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சியில் இருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் அரசு பங்களாவை அங்கிருந்த அமைச்சர்கள் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இபிஎஸ் தங்க அனுமதி
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் செவ்வந்தி இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி அங்கேயே தங்குவதற்கு அனுமதி கோரியிருந்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அவகாசம்
அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் தான் வசித்து வந்த தென்பெண்ணை இல்லத்தை காலி செய்ய அவகாசம் கேட்டிருந்தார். அவரது தம்பி ஓ.பாலமுருகன் மறைவால் முழுமையாக இல்லத்தை காலி செய்ய முடியவில்லை என்று கூறி அவகாசம் கேட்டிருந்தார். அது தவிர அக்னி நட்சத்திர காலத்தில் யாரும் புது வீட்டிற்கு செல்ல மாட்டார்கள் என்பதனாலும் ஓபிஎஸ் தான் குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்யவில்லை.
புது வீட்டிற்கு குடியேறிய ஓபிஎஸ்
இந்த நிலையில் நல்ல நாளான இன்றைய தினம் வாஸ்து நாளாகவும் உள்ளது. எனவே அரசு பங்களாவை காலி செய்துவிட்டு சென்னையில் புதுவீட்டுக்கு மாறியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். சென்னை திநகர் கிருஷ்ணாசாலையில் நடிகர் சிவாஜி இல்லம் அருகே உள்ள வீட்டில் குடியேறியுள்ளார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தென்பெண்ணை இல்லத்தில் பத்தாண்டு காலமாக வசித்து வந்த ஓபிஎஸ் பெரும்பாலான பொருட்களை காலி செய்துவிட்டார். தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அந்த வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்து விரைவில் அந்த வீட்டில் குடியேறுவார் மகேஷ் பொய்யாமொழி.
ஓபிஎஸ்க்கு ராசியான வீடு
ஓபிஎஸ் நிதியமைச்சராக, முதல்வராக, துணை முதல்வராக இருந்தபோதெல்லாம் இதே தென்பெண்ணை வீட்டிலேயே தொடர்ந்து தங்கியிருந்தார். இந்த இல்லம் தனக்கு மிகுந்த ராசியானது என நெருக்கமான நண்பர்களிடம் சொல்லி வந்தார். தற்போது அதிமுக ஆட்சியை இழந்து விட்டதால் அரசு இல்லமான தென்பெண்ணை வீட்டை காலி செய்துவிட்டு புது வீட்டிற்கு மாறியுள்ளார் ஓபிஎஸ்.