பொதுக்குழுவுக்கு தான் தடை இல்ல.. ஆனா.. பாயிண்ட்டை பிடித்த ஓபிஎஸ் தரப்பு - அதே திட்டம் தானாம்!
சென்னை : பொதுக்குழு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றமே தெரிவித்த நிலையில், புதிய பதவி, தீர்மானங்களுக்கு பொதுக்குழுவில் தடை பெறும் நோக்கில் வாதங்களை முன்வைத்து வருகிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்ட நிலையில், நாங்கள் என்ன செய்ய முடியும் என ஐகோர்ட் நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, மற்ற நிவாரணங்களை பெற உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.
பொதுக்குழு கூட்டியதே செல்லாது.. ஓபிஎஸ் பரபர வாதம்.. நான் என்ன செய்வது? உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி
ஐகோர்ட்டில் வழக்கு
அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதாடிய எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
பொதுக்குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நாங்கள் என்ன செய்ய முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டலாம், அதற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், மற்ற நிவாரணங்களை பெற உயர்நீதிமன்றத்தை அணுகலாம் கோரிக்கைகளை எழுப்பலாம் எனத் தெரிவித்திருந்தது.
நோட்டீஸே செல்லாது
கட்சியின் சட்ட விதிகளின்படியே பொதுக்குழுவை கூட்டலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், உட்கட்சி விதிகளை மீறி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்பதுதான் எங்களின் வாதம். ஜூலை 11 நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா என்பதுதான் இந்த வழக்கு என வாதிட்டார்.
அதிகாரம் இல்லை
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு அங்கீகாரம் அளிக்கப்படாததால், அவர்கள் செயல்பட முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் அந்த விவகாரமே எடுக்கப்படவில்லை. தலைமை நிலைய நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஒரு பதவியே இல்லை. கட்சி விதிகளில் பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்க்கு மட்டுமே அதிகாரமே உள்ளது என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஓபிஎஸ் தரப்பின் நோக்கம்
பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், மற்ற நிவாரணங்களைக் கேட்கலாம் என தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு உள்ளதாக வாதங்களை முன்வைத்து வருகிறது ஓபிஎஸ் தரப்பு. ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் புதிய பதவி உருவாக்கம், பதவி நீக்கம் தொடர்பான தீர்மானங்கள் கொண்டு வருவதற்கு தடை பெறும் நோக்கிலான வாதங்களையே முன்வைத்து வருகிறது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.
கடந்த முறை போலவே
கடந்த முறையும் பொதுக்குழுவை நடத்த தடை இல்லை என தீர்ப்பு வந்த நிலையில், இரவோடு இரவாக போராடி புதிய தீர்மானங்களை நிறைவேற்ற தடை பெற்றார் ஓபிஎஸ். அது எடப்பாடி தரப்புக்கு பெரிய அடியாக அமைந்தது. இந்த முறையும் அதுபோலவே, பொதுக்குழுவில் புதிய பதவியை உருவாக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என தடை பெற ஓபிஎஸ் தரப்பு திட்டமிடுவதாக வாதங்களின் மூலம் தெரியவருகிறது.