அட.. இங்க பாருங்க எச்.ராஜா! ஸ்டாலினை தேடி வந்து பேசிய தலைகள்.. ஆளுநர் மாளிகையில் சுவாரஸ்ய மீட்டிங்!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மாலை அளித்த தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த தேநீர் விருந்தின்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். சுதந்திர தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பார். அதன்படி, இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.

ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் தேநீர் விருந்தில் பங்கேற்கவுள்ளதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருந்தார். அதன்படி இன்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் பிரேமலதா, சுதீஷ், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர்.
மேலும், நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்படுவதாக கூறி ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.
ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கச் சென்ற முதல்வரை ஆளுநர் ரவி வரவேற்றார். ஆளுநர் ரவிக்கு சால்வை அணிவித்து வ.உ.சிதம்பரனார் புத்தகத்தை பரிசளித்தார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, ஆளுநருடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசித்தார் முதல்வர் ஸ்டாலின். பின்னர், தேநீர் விருந்து நடைபெறும் இடத்துக்குச் சென்று வட்ட மேசையில் அமர்ந்து உரையாடினர்.
ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆளுநருடன் அமர்ந்து ஸ்டாலின் தேநீர் பருகிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கியதோடு, அவரிடம் நலம் விசாரித்தார்.
உடனே எழுந்து சென்று ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து, கைகுலுக்கி அவரிடம் பரஸ்பரம் விசாரித்து சில நிமிடங்கள் பேசினார் முதல்வர் ஸ்டாலின். மேலும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. ஸ்டாலின் அமர்ந்திருந்த இடத்துக்கே வந்து அவரிடம் பேசி, நலம் விசாரித்தார். அவருடனும் கைலுக்கி நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். துரைமுருகன் உள்ளிட்டோரிடமும் பேசினார் எச்.ராஜா. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications