ஓபிஎஸ் தொடங்கிய 2-வது தர்ம யுத்தம்! அதிமுகவை மீட்கும் வரை ஓயாது எனது அதிரடி சபதம்!
அதிமுகவை பாதுகாக்க 2-வது தர்ம யுத்தம் தொடங்கி இருப்பதாக பிரகடனம் செய்துள்ளார் ஓபிஎஸ்.
சென்னை: அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் 2-வது தர்மயுத்தத்தை தொடங்கி உள்ளார். அதிமுகவின் சட்ட விதிகளைப் பாதுகாத்து அதிமுகவை மீட்கும் வரை இந்த தர்ம யுத்தம் ஓயாது என அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.
தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

தமிழ்நாடு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற போதும் ஜெயலலிதாவின் கட்சி பதவியான அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவி காலியாகவே இருந்தது. 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை ஏற்று சசிகலாவும் 2016-ம் ஆண்டி டிசம்பர் 31-ந் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
இதன்பின்னர் கள நிலவரம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டது போல சசிகலாவே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்கிற குரல் அதிமுகவில் உருவாக்கப்பட்டது அல்லது உருவானது எனலாம். இதன் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தமது ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம். அதே நாளில் சசிகலா முதல்வராகும் வகையில், அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தமிழ்நாட்டின் புதிய முதல்வராக சசிகலா பதவியேற்க இருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
ஆனால் திடீரென 2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி இரவு 8.50 மணிக்கு சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு நீண்டநேரம் தியானம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என கண்ணீர் மல்க கூறியதுடன் தாம் தர்ம யுத்தம் தொடங்கி உள்ளதாகவும் பிரகடனம் செய்தார். இதுதான் ஓபிஎஸ் நடத்திய முதல் தர்ம யுத்தம்.

ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்திய காலத்தில் சசிகலா, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குப் போனார். அப்போது அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கூவத்தூர் ரிசார்ட்டில் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. அப்போது ஓபிஎஸ் ஆதரவு 11 எம்.எல்.ஏக்கள் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் டிடிவி தினகரன்- எடப்பாடி மோதல் வெடித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டனர். அத்துடன் ஓ.பன்னீர்செல்வத்தின் முதலாவது தர்ம யுத்தம் முடிவுக்கு வந்தது.
இதன்பின்னர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என்கிற பதவிகள் உருவாக்கப்பட்டன. இருந்த போதும் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகளிடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஓபிஎஸ் எப்போது 2-வது தர்ம யுத்தத்தை தொடங்குவாரோ என்கிற கேள்வியும் நீடித்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் என பகிரங்கமாகவே பிளவுபட்டுவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக இந்த அக்கப்போர் சற்று ஓய்வுக்கு விடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஓபிஎஸ், 2-வது தர்ம யுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் ஓபிஎஸ் கோஷ்டி மாவட்ட நிர்வாகிகளிடம் பேசுகையில், அதிமுகவின் சட்டவிதிகளைப் பாதுகாக்க 2-வது தர்ம யுத்தம் தொடங்கியுள்ளோம். அதிமுகவை மீட்கும் வரை ஓயமாட்டோம் என சபதம் எடுத்து பேசினார். ஓபிஎஸ் தொடங்கி இருக்கும் இந்த 2-வது தர்ம யுத்தம் எவ்வளவு காலத்துக்கு தொடரும் என்பதுதான் இன்றைய அரசியல் களத்தின் பெரும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications