ஆகஸ்ட் இறுதியில் பிரதமருடன் சந்திப்பு? அண்ணாமலை பக்கமாக திரும்பிய ஓபிஎஸ்.. நயினாருக்கு சிக்கல்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர டெல்லியில் அண்ணாமலை தரப்பு முயன்று வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கவும் அண்ணாமலை தரப்பு முடிவு எடுத்துள்ளதாகவும், பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் தரப்பைச் சந்திக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது, அவரை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பு முயற்சித்தது. ஆனாலும் கடைசி வரை எந்த பலனும் அளிக்கப்படவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக தரப்பை மட்டும் நரேந்திர மோடி சந்தித்து சென்றார். இதனால் அப்செட்டான ஓபிஎஸ் தரப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.

அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்து வெளியேறிய அடுத்த சில மணி நேரங்களிலேயே முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டிற்கே சென்று ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சந்தித்தனர். அப்போது ஓபிஎஸ் காரில் வாசல் வரை சென்ற வைத்திலிங்கம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த போது உடனிருக்கவில்லை. இதன்பின் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை கையில் எடுக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு எடுத்தது.
தொடர்ந்து ஓபிஎஸ் தனக்கு சாதகமாக உள்ள மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்திக்கவும், கூட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்பின் தேர்தல் நெருங்கும் போது யாருடன் கூட்டணி என்பது குறித்த முடிவு செய்யத் தயாரானது. இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு பிரிவினர் பாஜக கூட்டணியில் இருக்கலாம் என்றும், இன்னொரு பிரிவினர் நிரந்தரமாக வெளியேறலாம் என்று கூறி வருவதாக தெரிகிறது.
ஓபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரை பாஜக மீண்டும் தங்களை மரியாதையுடன் அழைத்து பேச வேண்டும் என்பதே நோக்கம். இதனால் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையைத் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் லோக்சபா தேர்தலின் போது அண்ணாமலையுடன் ஓபிஎஸ் அதிகளவில் நெருக்கம் காட்டினார். தேர்தலுக்கு பின்னரும் ஓபிஎஸ்க்கு உரிய மரியாதையை அளித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டில் நாங்கள் வலுவாக இல்லாத போது, ஓபிஎஸ் அண்ணன் மற்றும் டிடிவி தினகரன் அண்ணன் ஆகியோர் எங்களுடன் உடனிருந்தனர் என்று கூறி இருந்தார். அதேபோல் அண்ணாமலை தலைவராக இருந்த போது, ஓபிஎஸ்க்கு டெல்லியில் நல்ல மரியாதை இருந்தது. அதேபோல் தமிழக பாஜகவில் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை தரப்புக்கு இடையில் மோதல் இருந்து வருகிறது.
இதனால் தென் மாவட்டங்களில் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் கொடுக்க ஓபிஎஸ் தரப்பை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர அண்ணாமலை முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் தரப்பை சந்திக்க வைக்க அண்ணாமலை தரப்பு டெல்லியில் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications