லெப்ட் காலை சுழற்றி.. டேபிளை உடைத்தது எல்லாம் வேஸ்ட்.. அதிர்ந்து நிற்கும் ஓபிஎஸ்.. என்ன நடக்குது?
சென்னை: "எப்படிங்க நடந்தது.. எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது.. நீதிபதிகள் எங்கள் வாதத்தை ஏற்கவில்லை.. நாங்கள் மேல்முறையீடு செய்வோம்".. இதுதான் தற்போது ஓ பன்னீர்செல்வம் கேம்பில் தற்போது கேட்கும் புலம்பல். அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னதாக அதிமுக பொதுக்குழுவை ஜூலை 11ம் தேதி நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி வழங்கியது.
இதை பயன்படுத்தி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

கலைந்த சீட்டு கட்டு
இதில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதும் நீக்கப்பட்டது. அதன்படி அதிமுகவில் மீண்டும் ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் ஆனார்.

நீக்கம்
அதோடு அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கு வரிசையாக நிர்வாகிகள் ஆதரவு ஆதரிக்க தொடங்கியது. சமீபத்தில் சேலத்து நிர்வாகிகள் சிலர் ஓ பன்னீர்செல்வம் கேம்பிற்கு சென்றனர் . அதேபோல் எம்பி தர்மர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இன்னொரு பக்கம் ஆர்.பி உதயகுமாரின் உள்ளூர் கோட்டையில் ஓட்டை போட்டு ஐயப்பனை தன் பக்கம் இழுத்து இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். இன்னும் பல மாவட்ட நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றனர்.

நேற்று என்ன நடந்தது?
நேற்று கூட விருதுநகர் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொண்டர்கள் பலர் அவரை வரவேற்றனர். அதிமுகவில் தனக்கு உயர்ந்து வந்த ஆதரவு பற்றி ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், அதிமுகவில் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் புரட்சி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். எங்களுடன் இன்னும் பலர் இணைய போகிறார்கள். எங்களுடன் இணைய போவது யார் யார் என்பது பரம ரகசியம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவையும் டிடிவி தினகரையும் விரைவில் சந்திக்கவுள்ளேன், என்று ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்

போச்சு
அதோடு 30-40 எம்எல்ஏக்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்ல போவதாகவும் கூட தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் கனவை எல்லாம் கலைக்கும் விதமாக தற்போது அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது . ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

சிக்கல்
இதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு திடீரென கிடைத்த ஆதரவு மீண்டும் குறையும் வாய்ப்புகள் உள்ளன. ஓ பன்னீர்செல்வம் பக்கம் தாவலாம் என்று நினைத்தவர்கள் பலர் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளது. இந்த வழக்கில் கண்டிப்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்யும். இருந்தாலும் உற்சாகமாக இருந்த ஓ பன்னீர்செல்வம் கேம்பை இந்த தீர்ப்பு உடைத்து போட்டுள்ளது.

எடப்பாடி உற்சாகம்
மாறாக எடப்பாடி கேம்ப் இன்னொரு பக்கம் உற்சாகம் அடைந்துள்ளது. அவரின் வீட்டிற்கு முன் கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன. மீண்டும் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் ஆன சந்தோஷத்தில் அவரின் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் மாறி மாறி வரும் தீர்ப்புகள், மாறி செய்யப்படும் மேல்முறையீடுகள் காரணமாக அதிமுகவில் டாப் தலைவர் யார், யாருக்கு அதிகாரம் என்று தெரியாத அளவிற்கு அதன் அடிமட்ட உறுப்பினர்கள் குழம்பிப் போய் உள்ளனர். எடப்பாடியா.. ஓபிஎஸ்ஸா அதிமுகவில் இப்போ யாருக்கு பவர் என்று தெரியாத அளவிற்கு அடிமட்ட நிர்வாகிகள் குழம்பிப்போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications