நாலரை வருஷம் மாட்டிக்கிட்டேன்.. சீனியர் சொன்னா எடப்பாடி கேட்க மாட்டார்! குமுறிய ஓ.பன்னீர்செல்வம்.!
சென்னை: சுமார் நான்கரை ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இடம் மாட்டிக்கொண்டிருந்தேன். மூத்தவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்கின்ற பக்குவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. அதிமுகவில் எனக்கு எந்த பதவியும் தேவையில்லை கட்சியில் இணைத்தாலே போதும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் 3ஆம், 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், பல இடங்களில் டெபாசிட்டும் பறிபோனது.

இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சீனியர்கள் மீது எடப்பாடி பழனிசாமியும், சீனியர்கள் எடப்பாடி பழனிசாமி மீதும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படுமா என விவாதங்கள் முளைத்துள்ள நிலையில், அதிமுக மீண்டும் ஒன்று படவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதிமுக தலைமைக்கு வந்த பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலுமே அதிமுக தோல்வியை சந்தித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில பிரச்சினைகள் முளைத்திருக்கிறது.
காரணம் டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளினர். இதனால் அவர்கள் இருந்தால் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என குரல்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சசிகலா உள்ளிட்டோரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதற்கிடையே இராமதநாதபுரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட ஓபிஎஸ் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் களத்திற்காக நான் பல தியாகங்களை செய்திருக்கிறேன். கட்சியில் இருக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நிறைய இழந்து இருக்கிறேன்.
சுயேசையாக நின்ற போதும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 33 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிஏன். அங்கு மக்கள் யாருக்கு தீர்ப்பளித்து இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அதிமுக ஒன்றாக இருந்திருந்தால் உடையாமல் இருந்திருந்தால் 39 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தது. பல நிர்வாகிகள் அதிமுகவை மீண்டும் இணைக்க வேண்டும் என முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர். நான் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
எனக்காக தனியாக தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். எடப்பாடி பழனிச்சாமியும் நானும் ஒன்றாக இருந்தபோது எழில் என்பவரை பயன்படுத்தி என்னை பற்றிய செய்திகள் ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொண்டனர். என்னுடைய புகைப்படம் வராமல் பிளான் போட்டனர். என்னை புறக்கணிக்கும் நபர்களை வெளிச்சம் போட்டு காட்டவே ஐடி அணியை உருவாக்கி இருக்கிறேன்.
சுமார் நான்கரை ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இடம் மாட்டிக்கொண்டிருந்தேன். மூத்தவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்கின்ற பக்குவம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. அதிமுகவில் எனக்கு எந்த பதவியும் தேவையில்லை கட்சியில் இணைத்தாலே போதும்" என்றார்.












Click it and Unblock the Notifications