விஜய் உடன் கூட்டணி? தவெக பற்றி கேட்டதும் ஒரே வரியில் ஓபிஎஸ் சொன்ன வார்த்தை! ஆஹா நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்றாலும் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை மனதில் வைத்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டன. இதில் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் எந்த அணியில் இருப்பார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே ஓபிஎஸ் விஜய்யின் தவெக உடன் இணையலாம் எனத் தகவல் வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் சில முக்கிய தகவல்களைக் கூறியிருக்கிறார்.
இன்று சுதந்திரப் போராட்டத் தியாகி மாவீரர் பூலித்தேவன் பிறந்த நாளாகும். இதை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பூலித்தேவனுக்கு மரியாதை செலுத்தினார். தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவலில் அமைந்துள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து, அவர் மரியாதை செலுத்தினார்.

ஓ பன்னீர்செல்வம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம், "எம்ஜிஆர் தான் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைத் தொண்டர்கள் இயக்கமாக நிறுவினார். பிறகு அவரும் ஜெயலலிதாவும் சேர்ந்து அதிமுகவை மக்கள் இயக்கமாக மாற்றினர். தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களும் மேல் தட்டு மக்களுக்கு இணையான வாழ்க்கை வாழும் சூழலை ஏற்படுத்தித் தரும் அளவுக்கு இந்தத் தலைவர்கள் ஆட்சி செய்தனர்.
அதிமுக
மக்கள் சேவை, அரசுத் திட்டங்கள் ஆகியவை மக்களிடமே நேரடியாகக் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. நமது மாநிலத்தை முன்னேற்றக் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், விவசாயம் என எல்லாத் துறைகளிலும் புரட்சிகள் நடந்தன. இதற்கான நடவடிக்கைகளை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எடுத்தனர். ஆனால், இப்போது அதிமுக பிளவுபட்டு இருக்கிறது. பிரிந்திருக்கும் அனைவரும் ஒரே அணியில் இணைய வேண்டும். அதிமுக தொண்டர்கள் கொதித்துப் போய் உள்ளனர். அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
பிரிந்திருக்கும் சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன். தேர்தல் நெருங்கும்போது எல்லாம் மாறும். எல்லாத் தொகுதிகளிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் பாடும் தொண்டனாக நான் இருப்பேன்" என்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தான் வெளியேறிவிட்டதாகக் குறிப்பிட்ட ஓபிஎஸ், அரசியலில் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் அனைத்துக் கட்சிகளும் அனைத்துக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து உள்ளன என்றும் வருங்காலத்தில் எந்தக் கூட்டணி அமையும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்றார்.
திமுக அரசு
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், "தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார். அந்தப் பயணம் வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன். தமிழக டிஜிபி நியமனத்தில் சிலர் சர்ச்சையை எழுப்புகிறார்கள். சில நிர்வாக காரணங்களால் இப்போது டிஜிபி நியமனம் செய்யப்பட்டிருக்கலாம்.. அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனாலும், சீனியாரிட்டி அடிப்படையிலேயே டிஜிபி நியமனம் செய்ய வேண்டும் என்பது மரபாகும்" என்றார்.
விஜய் அரசியல்
மேலும் விஜய் அரசியல் குறித்துப் பேசிய பன்னீர்செல்வம், "விஜய் இப்போது தான் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவர் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது. தேர்தலில் நின்று, அதில் ஜெயித்து என்ன செய்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதன் பிறகே அவருடைய செயல்பாடுகள் குறித்து கருத்து சொல்ல முடியும்" என்றார்.
தவெகவில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ், "எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. கூட்டணி பற்றி இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை. ஆனால், மீண்டும் சொல்கிறேன் எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications