“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு!
தேனி: "யாரால் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வந்தார்? யாரால் பதவி பெற்றார்? சிறை செல்ல இருந்த அவரை, செல்வகணபதி, முத்துச்சாமி ஆகியோர்தான் காப்பாற்றினர் என நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்." என முன்னாள் முதல்வரும் போடி தொகுதி திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் திமுக எம்எல்ஏ லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "இன்றைய அரசியல் சூழலில் திமுகவில் நான் இணைந்ததை அனைவரும் வரவேற்கின்றனர். அதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய குணங்களை பெற்று அனைவரையும் அரவணைக்கும் பக்குவமிக்க ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டுமே என்பதால் தான்.
அவரது தலைமையில் செயல்படும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் இதுவரை யாரும் வெளியேறினார்கள் என்ற நிலை இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தனக்குத் தானே கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணியின் தலைவர் என்று உருவாக்கிக் கொண்டு கூறி வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிஅரசியல் நாகரீகம் இல்லாத தலைவராக உள்ளார். அவருக்கு படுதோல்வி உறுதி. ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை உருவாக்கியுள்ளது. அதனால் ஈபிஎஸ் மூளை அவுட் ஆகிவிட்டது. கலைஞரை பற்றி பேச ஈபிஎஸ்க்கு தகுதியில்லை. அண்ணாவின் தம்பியாக, பெரியாரின் சிஷ்யனாக எவ்வளவோ சோதனைகளை தாண்டி தமிழக மக்களுக்கு சமூக நீதியை பெற்றுக் கொடு்த்தவர் கலைஞர். அத்தகைய தலைவர் குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?
யாரால் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வந்தார், யாரால் பதவி பெற்றார்? சிறை செல்லவிருந்த எடப்பாடி பழனிசாமியை செல்வகணபதி, முத்துச்சாமி ஆகியோர்தான் காப்பாற்றினர். உலகில் நன்றி கெட்ட நம்பிக்கை துரோகி அரசியல்வாதி எடப்பாடி பழனிசாமி மட்டுமே. எந்த நேரத்தில் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக வந்தாரோ, அப்போது முதல் அதிமுக தொடர் தோல்விகளைத்தான் சந்தித்து வருகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications