உளவு ரிப்போர்ட்! பாஜக ஆதரவில் ஓபிஎஸ் சிஎம் ஆகிடுவார்? சுதாரித்த எடப்பாடி! புட்டு புட்டு வைத்த புள்ளி
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு இல்லை என்று சொல்ல முடியாது என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு இருப்பதாக டெல்லி பாஜகவிற்கு ரிப்போர்ட் சென்றுள்ளது, அதனால் பாஜக அவரையும் ஆதரிக்கிறது என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டியில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக ஒரு அணிக்குள் இருந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும். இது பற்றி ஓ பன்னீர்செல்வத்திடம் பேசினேன். ஓ பன்னீர்செல்வத்தின் வேட்பாளரை விட எடப்பாடி தரப்பின் வேட்பாளருக்கு அதிக ஆதரவு உள்ளூரில் உள்ளது. அதனால் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன். ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பளாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன், என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவின் இந்த நிலைப்பாடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஓபிஎஸ் - எடப்பாடி சேர வேண்டும் என்று பாஜக வெளிப்படையாக கூறி உள்ளது. பாஜகவின் இந்த நிலைப்பாடு தொடர்பாக அரசியல் விமர்சகர் ரிஷி இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
பாஜகவை கழற்றிவிட்டால் எடப்பாடி தனியாக பெரிதாக கூட்டணி வைக்க முடியாது. தமிழ்நாட்டில் அடையாளம் இல்லாத சிறு சிறு கட்சிகள் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். ஆனால் பெரிய கட்சிகள் எடப்பாடியை தனியாக தலைவராக ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். இப்போது ஈரோடு கிழக்கு தேர்தலில் நடக்கும் காட்சிகள் எல்லாம் தற்காலிகம்தான். இப்போது ஈரோடு இடைத்தேர்தலுக்காக பாஜக மற்றும் பாஜக பக்கம் இருக்கும் கட்சிகள் வேண்டுமானால் எடப்பாடியை ஆதரிக்கலாம். ஆனால் அதற்கு தற்காலிகம்தான். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மூன்று முனை போட்டிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

எடப்பாடி
எடப்பாடி இறங்கி வந்தால் அதிமுக ஒன்று சேரும். அதிமுக உடைந்தால் கண்டிப்பாக மும்முனை போட்டி நடக்கும். எடப்பாடி பழனிசாமியை கண்டிப்பாக பாஜக தனியாக ஏற்றுக்கொள்ளாது. தனியாக அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளாது. எடப்பாடி - ஓ பன்னீர்செல்வத்தை பாஜக இணைக்க பார்க்கிறது. அது நடக்கும் வரை பாஜக முயற்சிகளை செய்யும். ஒருவேளை லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் எடப்பாடி இறங்கி வரவில்லை என்றால் மும்முனை போட்டி ஏற்படலாம். அப்போது என்ன நடக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். இப்போது ஈரோடு பொதுக்குழு தேர்தலுக்காக வந்த தீர்ப்பு இடைக்கால தீர்ப்புதான். அதிமுகவின் எதிர்காலத்தை இது இறுதி செய்யாது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்சுக்கு பலம் இல்லை என்கிறார்கள். ஆனால் அதே ஓபிஎஸ்தான் எல்லா வேட்பாளர்களும் தோல்வி அடைந்த போது கூட தனது மகனை தேனியில் வெற்றிபெற வைத்தார். அதுதான் அவரின் செல்வாக்கு. அவருக்கு பலம் இல்லை என்று கூற முடியாது. மோடியை பிரச்சாரத்திற்கு கொண்டு வந்தே தேனியில் மகனை வெற்றிபெற வைத்தார். தேவர் பூஜை தொடங்கி பல விஷயங்களில் ஓபிஎஸ் பவரை காட்டினார். கொங்கு மண்டலத்தில் கூட கொங்கு வெள்ளாள சாதியினருக்கு மாற்று சாதியினர் ஓ பன்னீர்செல்வம் மீது அனுதாபம் கொண்டு உள்ளனர். அதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு இல்லை என்று சொல்ல முடியாது.

ஐபி ரிப்போர்ட்
ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு இருப்பதாக டெல்லி பாஜகவிற்கு ரிப்போர்ட் சென்றுள்ளது. ஐபி உளவுத்துறை ரிப்போர்ட் இதற்காக சென்றுள்ளது. அவர்களுக்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு உள்ளது என்று தெரியும். அதனால்தான் ஓபிஎஸ் அதிமுகவில் இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதனால்தான் அதிமுகவில் இரண்டு தலைவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஓபிஎஸ் - எடப்பாடி சேர்ந்து இருந்தால்தான் தங்களுக்கு பாதுகாப்பு என்று பாஜக நினைக்கிறது. அதைதான் சிடி ரவி, அண்ணாமலை குறிப்பிட்டார்கள். இவர்கள் சேர வேண்டும். தனியாக இருந்தால் நமக்குத்தான் சிக்கல். நமக்கு லாபம் இல்லை என்று டெல்லி நினைக்கிறது.

சேர்க்க வேண்டும்
இவர்களை ஒன்றாக சேர்க்க வேண்டும் என்று ரிப்போர்ட் சென்றுள்ளது. அதற்கான பணிகள் நடந்து உள்ளன. ஆனால் இதை எடப்பாடி விரும்பவில்லை. பாஜக சொல்வதை கேட்டு ஓ பன்னீர்செல்வம் உள்ளே வந்தால், பின்னர் பாஜக ஆதரவோடு ஓபிஎஸ் முதல்வர் ஆகிவிடுவார் என்று எடப்பாடி நினைக்கிறார். அதை தடுக்க வேண்டும் என்றுதான் ஓபிஎஸ்சை எடப்பாடி எதிர்க்கிறார். சிவி சண்முகம், ஜெயக்குமார் போன்றவர்கள் பாஜகவை எதிர்த்து பேசுகிறார்கள். இவர்கள் பாஜகவை எதிர்க்க காரணமே எடப்பாடிதான். எடப்பாடி சொன்னதை கேட்டுத்தான் இவர்கள் எல்லாம் பாஜகவை எதிர்க்கிறார்கள், என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications