ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்! பல்ப் கொடுத்த பாஜக! குழம்பிய குட்டையாக ஓபிஎஸ்! சரியும் கூடாரம்!
சென்னை: அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பாஜகவுடன் கூட்டணி முறிவு, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது, தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சு வார்த்தை என அவரது செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் என்ன செய்வது? என்று தங்களுக்கே தெரியவில்லை என புலம்புகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுக பொது செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஆன ஜெயலலிதா இருந்தவரை ராணுவ கட்டுப்பாடு இருந்த இயக்கம் என அதிமுகவை சொல்வார்கள். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நிலைமை தலைகீழாகிவிட்டது.
பல அணிகளாக கட்சி சிதறுண்டு ஒரு வழியாக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது தலைமையில் தான் அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க ஜெயலலிதா இருந்தபோது அதிகாரம் மையமாக இருந்த சசிகலா தற்போது நான் தான் பொது செயலாளர் என தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபுறம் டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார். இதற்கிடையே சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி என அடுத்தடுத்து பலரையும் பகைத்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் அவருடன் இருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி உடனான மோதலின் போது அவருடன் பயணித்த பல நிர்வாகிகள் தற்போது அவரை விட்டு விலகி விட்டனர். இதற்கிடையே கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஓபிஎஸ், அதிமுக சின்னமான இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இனிமேல் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
இது ஒருபுறம் இருக்க அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் அதில் தான் இருக்கிறேனா? இல்லையா? என்பது கூட தெரியாத நிலையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது அவரை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டார். ஆனால் சந்திப்பு நடைபெறவில்லை. இதனால் தன்னை ஓரம் கட்டுகிறார்கள் என நினைத்த ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
அடுத்த நாளே மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதற்கு அடுத்த நாள் காலையிலும் மாலையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதனால் அன்வர் ராஜாவைப் போல ஓபிஎஸ்ஸும் திமுகவில் இணைய போவதாக கூறப்பட்டது. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான மறைமுக பேச்சு வார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
மேலும் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்த ஓபிஎஸ் அந்தத் திட்டத்தை விட்டு விட்டு மண்டல வாரியாக மக்களை சந்தித்து பேச இருப்பதாக அறிவித்திருக்கிறார். இப்படி அடுத்தடுத்து குழப்பமான முடிவுகளால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை எதிர்த்த போது ஓபிஎஸ்-க்கு இருந்த செல்வாக்கு தற்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு முற்றிலும் சரிந்து போய்விட்டதாக கூறுகின்றனர் அதிமுகவினர்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது கூட தவறில்லை, ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் முற்றாக நீர்த்து போய்விடும் என அவரது ஆதரவாளர்களை சொல்லி வருகின்றனர்.அதிமுகவுடன் மீண்டும் இணைப்பா? திமுகவுடன் கூட்டணியா? பாஜக கூட்டணியில் மீண்டும் சேர்வதா? அல்லது விஜய் உடன் கூட்டணியா? என தற்போது ஓ.பன்னீர்செல்வம் தடுமாறி வரும் நிலையில், அவரது எதிர்காலமும், அவரை நம்பி இருக்கும் எங்களது எதிர்காலமும் என்ன ஆகப் போகிறது என தெரியவில்லை என அவரது ஆதரவாளர்களே புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications