தொண்டர்கள் தயவுசெய்து அமைதியா இருங்க.. ஓ.பன்னீர்செல்வம் திடீர் வேண்டுகோள் - வலுக்கும் குழப்பம்!
சென்னை : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரும் தயவுசெய்து அமைதி காக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக கடுமையான விவாதம் எழுந்துள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வரும் நிலையில், ஓ.பி.எஸ் தொண்டர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. வரும் 23-ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது வெளியே தொண்டர்கள் சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திலும் ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

ஓ.பி.எஸ்
எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தனக்கு எதிராகத் திரும்பியதால் ஒ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, தனது வீட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்றும், இன்றும் பல கட்டங்களாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அவசர ஆலோசனை
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் எம்.சி.சம்பத், வைத்திலிங்கம், காமராஜ், மணிகண்டன், ஆர்.பி.உதயகுமார், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரோடு ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

போஸ்டர் சர்ச்சை
இந்நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் கிழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இது அக்கட்சியில் பெரும் மோதல்களை உண்டாக்கியுள்ளது.

தொண்டர்கள் குழப்பம்
எடப்பாடி பழனிசாமி, தனக்கு நிர்வாகிகள் மத்தியில் உள்ள ஆதரவைக் கொண்டு பொதுச் செயலாளர் ஆவதற்கு திட்டமிட்டு வருவதாகவும், எடப்பாடியின் திட்டத்தை முறியடிப்பது குறித்து ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருவதால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஓ.பி.எஸ் ட்வீட்
அதிமுகவில் நேற்று முதல் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தனது அடுத்தகட்ட நகர்வை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications