ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு.. திடீரென வைக்கப்பட்ட கோரிக்கை.. ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுடன், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மனுக்களையும் சேர்த்து நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி கே. குமரேஷ் பாபு நேற்று முன் தினம் (மார்ச் 28) அளித்த தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூவரின் தரப்பில், நீதிபதி குமரேஷ்பாபுவின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்களையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் , அனைத்து மனுக்களையும் சேர்த்து நாளை விசாரிப்பதாக தெரிவித்து, ஒபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications