"அதே மாதிரி" ராத்திரி நேரத்தில் பிரஸ்மீட்..வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசிய ஓபிஎஸ்: தர்மயுத்தம் 2.0
ஓபிஎஸ் ஒற்றை தலைமை குறித்தும், ஜெயக்குமார் குறித்தும் பேட்டி தந்துள்ளார்
சென்னை: "என்னை அதிமுக தொண்டர்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது.. இது காலத்தின் கட்டாயம் என்று" ஓபிஎஸ் இன்று அழுத்தம் திருத்தமாக சொல்லி உள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கி உள்ளது.. கடந்த 5 வருடமாகவே, ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே புழுங்கி கிடந்த பிரச்சனை, இன்று வெடித்து கிளம்பி விட்டது.
இதனால், அதிமுக கூடாரமே பரபரப்பாக காணப்படுகிறது.. கடந்த ஆண்டு செயற்குழுவில் முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது..

ஓபிஎஸ்
அதன்படி, ஒற்றைத் தலைமையை முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு இல்லை என்றும், அப்படி பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரத்தை முன்னெடுத்தால் செயற்குழுவின் தீர்மானத்தை மீறிய செயலுக்காக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஓபிஎஸ்ஸும், அவரது ஆதரவாளர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.. அதேபோல, ஒற்றை தலைமையை கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டும் என்பது எடப்பாடி தரப்பிலும் ஆலோசித்து வருகின்றனர்.

எடப்பாடி மெஜாரிட்டி
இன்றும் தனித்தனியாக ஆலோசிக்கப்பட்டது.. எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, எடப்பாடிக்கே மெஜாரிட்டி ஆதரவு உள்ளதாக தெரிகிறது.. எனினும் ஓபிஎஸ் பிடிவாதமாக இருந்து வருகிறார்.. இந்நிலையில், செய்தியாளர்களையும் ஓபிஎஸ் பேசினார். அப்போது, அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என தீர்மானம் போடப்பட்டிருக்கிறது.. ஜெயலலிதாவுக்கு கொடுத்த பொதுச்செயலாளர் மரியாதையை காலாவதியாக்கினால் அது ஜெ.வுக்கான துரோகமாகவே கருதப்படும்..

ஆலோசனை கூட்டம்
அதிமுகவில் ஜெயலலிதான் தான் நிரந்தர பொதுச்செயலர் என்று பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுவிட்டது.. ஆனால், எனக்கு அதிகார ஆசை இல்லை.. ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை ஜெயக்குமார் வெளியே போய் சொல்லிவிட்டார்.. கூட்டத்தில் பேசியதை யாரும் வெளியில் சொல்லக்கூடாது என்று சொன்னோம்.. அப்படி இருந்தும், ஜெயக்குமார் சொல்லிவிட்டார்.. அதுதான் இன்றைக்கு இவ்வளவு விஷயமாக மாறி உள்ளது.. என்னை பொறுத்தவரை, தொண்டர்களை காக்கவே இந்த இயக்கத்தில் இருக்கிறேன்..

மனநிறைவு
2 முறை முதல்வராக மனநிறைவோடு பணியாற்றியிருக்கிறேன்.. எதுக்குமே ஆசைப்படாமல்.. ஜெயலலிதா உடல்நிலை மோசமானபோது, நீங்கள்தான் முதல்வராக வர வேண்டும் என்று என்னிடம் பேசினார்கள்.. நான் முடியாது என்றேன்.. 3 மாதம் மட்டுமே முதல்வராக இருப்பேன் என்று சொல்லித்தான் பதவியில் இருந்தேனே தவிர, எந்தவித அதிகார ஆசையும் கொண்டவனாக இல்லை. ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர்களால் இரட்டை தலைமை நடைமுறைக்கு வந்தது- ஒற்றைத் தலைமை என்பது இப்போது தேவை இல்லை என்று பேசியுள்ளார்.

சலசலப்பு
அதிமுகவை பொறுத்தவரை, எந்த ஒரு விவகாரமானாலும் சரி, ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருமே சேர்ந்துதான் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள்.. ஆனால், இதுவரை இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், தனித்தனியாக ஆலோசனைகள் நடந்துகொண்டு வரும்போது, இன்று மாலை திடீரென செய்தியாளர்களை சந்திக்க போவதாக செய்திகள் ஓபிஎஸ் தரப்பில் தகவல் வெளியானதுமே அதிமுகவில் மேலும் சலசலப்பு கூடியது.

2 விஷயங்கள்
ஓபிஎஸ் பேசியதில், 2 விஷயங்கள் தெளிவாக தெரிகிறது.. ஒன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவியைவிட்டுத்தர தயாராக இல்லை. மற்றொன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆல்டைம் ஃபேவரைட் ஆதரவாளரான ஜெயக்குமாருக்கு ஒரு குட்டு வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது இப்படித்தான், ஓபிஎஸ் தனியாக வந்து பேட்டி தந்தார்..

ராத்திரி நேரத்தில்
அப்போதும் இப்படித்தான் எடப்பாடியுடன் வெளிப்படையாகவே மல்லுக்கட்டி காணப்பட்டார்.. அப்போதும் இப்படித்தான், ராத்திரி நேரத்தில் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.. எதிர்ப்பை காட்டுவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி என்றாலும் ஓபிஎஸ் பாணி, சற்று வித்தியாசமாகவே உள்ளது.. ஆக மொத்தம், அதுமுகவில் இனி தான் சிக்கலே அதிகமாக போகிறது.. அதற்கான அச்சாரத்தைதான் இன்று ஓபிஎஸ் பேட்டியில் காண முடிகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதுமட்டுமல்ல, "ஒற்றை தலைமை தேவையா இல்லையா என்பதை பழனிசாமி தான் விளக்க வேண்டும், கட்சி பிளவை சந்திக்க கூடாது என்பதற்காகவே எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன், நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததற்கு மூல காரணம் தொண்டர்கள் தான், ஒற்றை தலைமை குறித்து நான் நேரடியாக குற்றம் சுமத்தி யாரையும் நோகடிக்க விரும்பவில்லை... என் கருத்தை சொல்லிவிட்டேன், இனி எடப்பாடிதான் அதைபற்றி பேச வேண்டும்" என்று சாதுர்யமாக பேசி, காய்களை எடப்பாடி பக்கமே திருப்பி விட்டுள்ளார் ஓபிஎஸ்.. இனி எடப்பாடி ஒற்றை தலைமை குறித்த, நேரடியான பதிலை பொறுத்துதான், இந்த விவகாரம் எந்த திசையை நோக்கி செல்லும் என்பது கணிக்கப்படும்..!












Click it and Unblock the Notifications