எந்த ஊதுகுழலும் இல்லை- கிருஷ்ண பரமாத்மாவின் புல்லாங்குழல்தான் இருக்கு- ஓபிஎஸ் பதில்
சென்னை: எந்த ஊதுகுழலும் எங்களிடம் இல்லை. மாறாக கிருஷ்ண பரமாத்மாவின் புல்லாங்குழலே எங்களிடம் உள்ளது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் பாலாறு பிரச்சினையில் சட்டரீதியாகவும் பேச்சு ரீதியாகவும் அடைந்த படுதோல்வியை மறைக்க பாஜகவின் ஊதுகுழலாக அதிமுக மாறி, அந்த கட்சியின் அறிவிக்கப்படாத மாநில தலைவராகியிருக்கிறார் எடப்பாடி என துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறுகையில் பாஜகவின் ஊதுகுழலாக அதிமுக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
ஊதுகுழலில் இரு வகைகள் உண்டு. ஒன்று அடுப்பில் வைத்து ஊதுவது, மற்றொன்று கிருஷ்ணரின் கையில் உள்ள புல்லாங்குழல். அதுதான் அதிமுகவின் கையில் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் 234 தொகுதிகளிலும் எந்தவித பாகுபாடின்றி மக்கள் பணிகளை தமிழக அரசு நடத்தி கொண்டுதான் வருகிறது. சிலர் அரசியல் லாபம் கருதி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது கண்டனத்துக்குரியது என்றார் ஓபிஎஸ்.