கடைக்கண் பார்வையை திருப்புமா டெல்லி? இத்தனை பிரச்சனைக்கு மத்தியில் ஓபிஎஸ் போட்ட ட்வீட் யாருக்கு!?
சென்னை : மகாராஷ்டிர முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் உச்சகட்டம் அடைந்திருக்கும் ஒற்றைத் தலைமை மோதலுக்கு இடையே தன் பக்கம் டெல்லியின் ஆதரவைப் பெறுவதற்காக காய்நகர்த்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
டெல்லிக்கே சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க முயன்ற ஓபிஎஸ், அவர் சந்திக்க நேரம் ஒதுக்காததால், வேறு முக்கிய புள்ளிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுத் திரும்பினார். இந்நிலையில், டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார் ஓபிஎஸ்.

மகாராஷ்டிரா அரசியல்
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்து ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், அங்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியை தவிர்க்கும் நோக்கில், உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய அரசு பதவியேற்பு
இதையடுத்து பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆட்சியமைத்துள்ளனர். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்றிரவு 7.30 மணிக்கு பதவியேற்பு விழா நடந்தது. இதில் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இருவருக்கும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

ஓபிஎஸ் வாழ்த்து
இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கும், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்! இவர்கள் தலைமையில் மகாராஷ்டிர மாநிலம் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக மோதல்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமை கோரிக்கையால் மோதல் எழுந்து அந்த விவகாரம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையைக் கைப்பற்ற ஈ.பி.எஸ் தரப்பும், இரட்டைத் தலைமையாகவே இருக்கவேண்டும், தனது இடம் பறிபோகக் கூடாது என ஓ.பி.எஸ்ஸும் முட்டி மோதி வருகின்றனர். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என இரு தரப்பினரும் சட்டப்பூர்வமாக அணுகி வருகின்றனர். இதற்கிடையே, அதிமுகவில் தனது இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பாஜக தலைமையின் ஆதரவு கேட்டு டெல்லி சென்றார் ஓபிஎஸ்.

டெல்லி ஆதரவு
டெல்லியில் நடைபெற்ற ஆலோசனையின்படி தனக்கு ஆதரவு வேண்டி சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டம் வகுத்து வருகிறார். வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு வரும் நிலையில், தொடர்ந்து டெல்லியின் ஆதரவைப் பெறும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளார் ஓபிஎஸ். டெல்லி தலைமையுடன் பேசுவதற்காக சென்னையில் ஒரு முக்கிய புள்ளியிடமும் ஓபிஎஸ் ரகசிய சந்திப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.
Recommended Video

காய்நகர்த்தும் ஓபிஎஸ்
இந்நிலையில்தான், மகாராஷ்டிராவில் பாஜகவின் முயற்சியால் அமைந்துள்ள அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். இதன்மூலம் பாஜக தலைமையின் கடைக்கண் பார்வையை தன் பக்கம் திருப்பி விடலாம் என ஓபிஎஸ் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், மகாராஷ்டிரா அரசு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எந்தவித பதிவையும் இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications