Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள் மகிழ எதுவுமே இல்லை.. விரக்தியின் உச்சநிலைக்கு அழைத்து செல்லும் பட்ஜெட்.. ஓபிஎஸ் காட்டம்!

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் மகிழும் அளவுக்கு ஏதுமில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளை விரக்தியின் உச்ச நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம், முருங்கை, தென்னை, மல்லிகை சாகுபடிக்கு ஊக்குவிப்பு திட்டங்கள் என தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டில் உள்ள பல அம்சங்களை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், வேளாண் தொழிலில் நிலவி வரும் பணியாளர் பற்றாக்குறையை போக்குவது குறித்து வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லை எனச் சாடியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

பெருத்த ஏமாற்றம்

பெருத்த ஏமாற்றம்

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் வாக்குறுதிகளான நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் போன்றவை இந்த ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இல்லாதது விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போதுள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு பார்த்தால், 2021ஆம் ஆண்டு தி.மு.கவினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையே குறைவு.

பாராமுகம் - வேதனை

பாராமுகம் - வேதனை

இப்படியான நிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இன்னமும் 2021 ஆம் ஆண்டு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட தி.மு.க அரசு அறிவிக்காதது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போது சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,115 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு 2,160 ரூபாயும் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், கேரளாவில் 2,820 ரூபாய் வழங்கப்படுகிறது. பேருந்துக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றிற்கு எல்லாம் அண்டை மாநிலங்களை ஒப்பிடும் தி.மு.க அரசு இந்த விஷயத்தில் மட்டும் பாராமுகமாக இருப்பது வேதனைக்குரியது. இதேபோன்று, கரும்பை எடுத்துக் கொண்டால் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள டன் ஒன்றுக்கு 2,821 ரூபாயுடன் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டாலும், குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கினால்தான் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கரும்பு விவசாயிகள் கருதுகிறார்கள்.

பணியாளர் பற்றாக்குறை

பணியாளர் பற்றாக்குறை

கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், தனியார் சர்க்கரை ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெற்றுத் தந்திட உரிய தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை தி.மு.க தேர்தல் சமயத்தில் அறிவித்தது. இருப்பினும், நிலுவைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேளாண் தொழில் வளர்ச்சி அடைய வேண்டுமானால், வேளாண் தொழிலில் நிலவி வரும் பணியாளர் பற்றாக்குறையை போக்குவது அவசியம். இதற்கான நடவடிக்கை குறித்து வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லை. மாறாக, வேளாண்மையை இயந்திரமயமாக்கும் முயற்சியை முன்மொழிந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விரக்தியின் உச்சத்தில்

விரக்தியின் உச்சத்தில்

இதைப் பார்க்கும்போது, வேளாண் தொழிலில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்க முடியாது என்ற நிலைக்கு அரசு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பல கோடி ரூபாய் செலவில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்புகள் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருந்தாலும் அவை எல்லாம் இயல்பான ஒன்றுதான். இந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் மகிழும் அளவுக்கும் ஏதுமில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகளை விரக்தியின் உச்ச நிலைக்கு அழைத்துச் செல்வதாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+