எல்லாமே டிராமா.. பேசி வச்சது.?ரெண்டு பேரும் அங்கேதானே.. அவைத்தலைவர் உடனே தேதியை அறிவித்தது எப்படி?
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்துமே எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் திட்டமிட்ட நாடகம் தான் எனக் குற்றம்சாட்டுகின்றனர் ஓபிஎஸ் தரப்பினர்.
Recommended Video
எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவிற்கு தாமதமாக வந்து, ஓ.பன்னீர்செல்வம் காக்க வைக்கப்பட்டது தொடங்கி அனைத்துமே திட்டமிட்டதுதான் எனக் கூறப்படுகிறது.
அடுத்த பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என சி.வி.சண்முகம் கோரிக்கை வைத்ததுமே, அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களை கூட ஆலோசிக்காமல் அவைத்தலைவர் தேதியை அறிவித்ததும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

அவமதிக்கப்பட்ட ஓபிஎஸ்
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பெரும் பரபரப்புக்கு மத்தியில் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார வாகனத்தில் பொதுக்குழுவுக்கு வருகை தந்தார். ஓபிஎஸ் வருகை தந்தபோது, ஒற்றை தலைமை வேண்டும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும், ஓபிஎஸை முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவேற்கவில்லை. ஓபிஎஸ் வெளியேறக் கோரியும் கேஷம் எழுப்பப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடையில் ஏறிய சிறிது நேரத்திலேயே எதிர்ப்பு காரணமாக கீழே இறங்கினார்.

எடப்பாடி பழனிசாமியின் தாமதம்
எடப்பாடி பழனிசாமி கடும் வாகன நெரிசலில் சிக்கியதால் அவர் வர தாமதம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி வரும் வரை ஓ.பன்னீர்செல்வம் தனி அறையில் காத்திருந்தார். அரை மணி நேரத்திற்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வம் காக்க வைக்கப்பட்டார். 10 மணிக்கு பொதுக்குழு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தனை நிர்வாகிகளும் மேடையில் காத்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது ஆளுமையை காட்டுவதற்காக வேண்டுமென்றே ஓபிஎஸ்ஸை காக்க வைத்ததாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒற்றைத் தலைமை
மேடையிலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மட்டுமே பேசினர். அனைவருமே எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக்கும் முடிவிலேயே பேசினர். முன்னாள் அமைச்சர் வளர்மதியும், என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே என்ற பாடலை குறிப்பிட்டு, ‘தலைவன் ஒருவன் இருக்கிறான். அவன் வருவான், வருவான்' என சூசகமாக எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக்க ஆதரவு தெரிவித்தார். ஒற்றை தலைமை நாயகர் என எடப்பாடி பழனிசாமியை ஜெயக்குமார் புகழ்ந்து பேசினார்.

சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான சி.வி. சண்முகம், திடீரென அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக மைக் முன்னே 3 முறை கோஷம் எழுப்பினார். இதையடுத்து, கூடியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பினர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும் ஒற்றைத் தலைமையுடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

நிரந்தர அவைத்தலைவர்
தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன், நிரந்தர அவைத் தலைவராக பொதுக் குழுவால் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவர் என மீண்டும் வலியுறுத்துவதாக அழுத்திச் சொன்னார்.

சி.வி.சண்முகம் கடிதம்
தொடர்ந்து, அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டும், இரட்டைத் தலைமையை ரத்து செய்து ஒரே தலைமையின்கீழ் கொண்டு வருவது பற்றி இங்கு விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியையும் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் கோரி பொதுக்குழு உறுப்பினர்கள் 2190 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை சி.வி.சண்முகம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் வழங்கினார்.

மீண்டும் பொதுக்குழு
இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ஆம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் எழுந்தபோது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர். அதைத்தொடர்ந்து, சட்டத்துக்கு புறம்பாக பொதுக்குழு நடைபெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் மைக்கில் கூறிவிட்டு, ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மேடையிலிருந்து இறங்கி வெளியேறினர்.

எல்லாமே நாடகம்
சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கை கடிதத்தை வழங்கியதுமே, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடனடியாக அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் அறிவித்தது சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பொதுக்குழு தாமதம் தொடங்கி, ஓ.பி.எஸ் அவமதிக்கப்பட்டது, தீர்மானங்கள் நிராகரிப்பு, அடுத்த பொதுக்குழு அறிவிப்பு எல்லாமே முன்பே திட்டமிடப்பட்ட நாடகம்தான் எனக் குற்றம்சாட்டுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

ஒருங்கிணைப்பாளரை ஆலோசிக்காமலேயே
யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அவைத்தலைவரால் உடனடியாக எப்படி பொதுக்குழு கூட்டப்படும் தேதியை அறிவிக்க முடியும்? ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அந்த மேடையில் அமர்ந்திருக்கும்போதே அவருக்கு தெரியாத ஒரு விஷயத்தை மேடையில் அறிவித்தது எல்லாமே எடப்பாடி பழனிசாமி தரப்பினர், இந்தப் பொதுக்குழுவிற்கு வருவதற்கு முன்பே அவசர அவசரமாக போட்டு வைத்த திட்டம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications