அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அதோ கதி! கேட்பார் பேச்சைக் கேட்டதன் விளைவு! ஆதரவாளர்கள் அப்செட்!
சென்னை: கேட்பார் பேச்சைக் கேட்டதன் விளைவாக அரசியல் வாழ்க்கையையே இன்று தொலைத்துவிட்டு நிற்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
Recommended Video
சசிகலா கொடுத்த பதவியை மீண்டும் அவரே திருப்பிக் கேட்ட போது அதற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் அன்று அவர் ஆரம்பித்து வைத்த சண்டை சச்சரவு இன்று அவரையே பதம் பார்த்துவிட்டது.

ஓ.பன்னீர்செல்வம் கதி
அரசியலில் உச்சபட்ச பதவியான முதலமைச்சர் பதவியில் மூன்று முறை அமர்ந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுகவில் இவர் தான் எல்லாம் என கிசுகிசுக்கப்பட்டவர். அப்படிப் பட்ட இவர், பெரும்பாலான தொண்டர்களின், நிர்வாகிகளின் நம்பிக்கையை கூட பெற முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அதிமுகவிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற அபாய நிலையில் இருக்கிறார்.

காரணம் என்ன?
இதற்கு காரணம் தன்னை நம்பி வந்தவர்களுக்கு கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி பெரிதாக எந்த உதவியையும் அவர் செய்யாததும் அவரது இந்த நிலைக்கு காரணம். அது மட்டுமல்லாமல் கேட்பார் பேச்சைக் கேட்டு செயல்பட்டதும் ஒரு காரணம். அதேபோல் வாரிசு அரசியல் என சசிகலாவையும், டிடிவி தினகரனையும் சாடிவிட்டு, தனது மூத்த மகன் ரவீந்தர நாத்தை எம்.பி.யாக்கியதோடு மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராக்கவும் முயற்சித்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

பின் விளைவுகள்
இவரது இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளும் முயற்சிகளும் அதிமுகவின் சீனியர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாகத் தான் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் போன்ற சீனியர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எந்த சசிகலாவும், தினகரனும் ஆகாது என அன்று எதிர்த்தாரோ இன்று அவர்களோடு மென்மையான போக்கை கடைபிடித்ததும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆதரவாளர்கள் அப்செட்
இதனிடையே எடப்பாடி பழனிசாமியை கட்சியை வீட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தாலும் கூட பெரும்பான்மை என பார்த்தால் அது எடப்பாடி பக்கமே அதிகம் உள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பு பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி கடைசிவரை அவருடன் நின்ற ஆதரவாளர்கள் தான் கடும் அப்செட்டில் அடுத்ததாக என்ன செய்வது எனத் தெரியாமல் நிற்கதியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications