துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவில் இருந்தாராம் ஓபிஎஸ்!
சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் நானே என அடம்பிடித்து வருகிறார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் அதிமுகவில் பெரும்பான்மையோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

செயற்குழுவில் மோதல்
அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இது தொடர்பாக காரசார மோதல்கள் நடைபெற்றன. ஓபிஎஸ்-க்கு தாம் நினைத்தது போன்ற ஆதரவு கிடைக்காததால் கடும் அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் இருந்து வருகிறார். அக்டோபர் 7-ந் தேதி முதல்வர் வேட்பாளரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஈபிஎஸ் நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு
தமது ஆதரவாளர்கள் சிலருடன் ஓபிஎஸ் நேற்று வீட்டில் ஆலோசனை நடத்தினார். முதல்வருடனான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓபிஎஸ் புறக்கணித்தும்விட்டார். இன்னொரு பக்கம் மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தீவிர ஆலோசனையும் நடத்தி வந்தனர். இந்த ஆலோசனைகள் இரவிலும் நீடித்தது.

ராஜினாமா செய்கிறாரோ?
இந்நிலையில்தான் ஓபிஎஸ் தமது காரில் இருந்து தேசிய கொடியை கழற்றிவிட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அரசு காரை பயன்படுத்தாமல் சொந்த காரையே ஓபிஎஸ் பயன்படுத்தும் முடிவில் இருக்கிறாராம். இதனால் துணை முதல்வர் பதவியை ஓபிஎஸ் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்வாரோ? என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆதரவாளர்களும் ஏற்கவில்லை?
தமது பதவியை ராஜினாமா செய்யும் முடிவு குறித்துதுதான் கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எந்த ஒரு ஆதரவுமே இல்லாமல் ஓபிஎஸ் இப்படி முதல்வர் வேட்பாளர் நானே என அடம்பிடிப்பதையும் இதற்காக பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதையும் அவர்களும் ரசிக்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications