பாஜக அழைத்ததால் டெல்லி போறேன்.. திடீர் அழைப்பு ஏன்? காரணத்தை சொல்லிவிட்டு கிளம்பிய ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் டெல்லி செல்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு இன்று அதிகாலை வெளியான பரபரப்புடன் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் கூடியது.
இந்த நிலையில் மேடையிலேயே இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

பொதுக்குழு ஒத்திவைப்பு
அப்போது பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நிரந்தர அவைத் தலைவர்
இ.பி.எஸ் ஆதரவாளரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்ததற்கு ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம், புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம். அ.தி.மு.க.வின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர். இன்று பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம்.

வைத்திலிங்கம் எதிர்ப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது. நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக வந்துள்ளது. அதை மீறி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். 23 தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு கூறிய நிலையில், அதையும் மீறி தீர்மானம் போடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் டெல்லி பயணம்
இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது டெல்லி செல்வதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் நாளை பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் நான் டெல்லி செல்கிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications