அதிமுகவை ஒன்றுபடுத்த மோடியின் டெல்லி பஞ்சாயத்து... அவிழ்க்கப்படாத அந்த ரகசியம்- விவரித்த ஓபிஎஸ்
சென்னை: அதிமுக ஆட்சியில் இருந்த போது அதிமுகவை ஒன்றுபடுத்த பிரதமர் மோடி டெல்லிக்கு வரவழைத்து அறிவுரை வழங்கினார்; அப்போது சில ரகசியங்களை பின்னர் சொல்வதாக தம்மிடம் தெரிவித்தார் என அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுகவில் தர்மயுத்தம் நடத்திய போது எங்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு 58% ஆக இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு என்பது வெறும் 4% தான் இருந்தது.

அந்த தருணத்தில் தங்கமணியும் வேலுமணியும் என்னை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது, அதிமுக இப்படியே போனால் மிகப் பெரிய சரிவை சந்திக்க நேரிடும் என மிகவும் பரிதாபப்பட்டு வருத்தப்பட்டு என்னிடம் இருவரும் சொன்னார்கள். அந்த கருத்தை நானும் ஏற்றுக் கொண்டு அதிமுகவுடன் இணைய வேண்டும் என நிலைப்பாட்டை எடுத்தோம்.
அந்த சமயத்தில், முதல்வராகவே எடப்பாடி பழனிசாமி தொடரட்டும்; அதிமுகவை நீங்கள் வழிநடத்துங்கள் என்கிற அஜெண்டாவை கொடுத்ததும் அவர்கள்தான். ஒருவர் முதல்வராக இருக்கிறார்; அவரை பதவியில் இருந்து இறக்கிவிட்டு நான் உட்பட எவராக இருந்தாலும் அந்த பதவியில் அமர்ந்தால் சரியாக இருக்காது என நினைத்தோம்.
இதனையடுத்தே அதிமுகவில் இணைவது என முடிவெடுத்தோம். அதிமுக தலைவர் பதவி குறித்தும் பேசினோம். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முதல்நாள் இரவு 12 மணிக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. அப்போது, அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பதில் உறுதியாக இருந்தோம். இதன் பின்னர் அனைத்து முடிவுகளிலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும் என புதிய அஜெண்டா கொண்டு வந்தனர். இது எப்படி சரியாக வரும் என தயக்கம் காட்டினோம். ஏனெனில் எந்த பிரச்சனையிலும் உறுதியான முடிவெடுக்க முடியாது என்று சொன்னோம். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இதில் பிடிவாதமாகவே இருந்தது. இதையும் ஏற்றுக் கொண்டோம்.
இதன்பின்னர் அதிகாரத்தைக் கொண்டு எங்களை எல்லாம் ஓரம் கட்ட தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் துணை முதல்வர் பதவியே வேண்டாம்; கட்சி பதவியே போதும் என எடப்பாடி பழனிசாமி அறையிலேயே நேரிலே சென்றும் சொல்லிவிட்டேன்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி என்னை டெல்லிக்கு வரவழைத்தார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது, பன்னீர்செல்வம் உங்களுடைய நிலைமை புரிகிறது;; பொறுத்து போங்கள் என்றார். ஆனாலும் பிரதமர் மோடியிடமும் கட்சியை மட்டும் நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லிப் பார்த்தேன். இதற்கான காரணம், ரகசியம் என்ன என்பதை பின்னாடி சொல்கிறேன் என்றார் பிரதமர் மோடி. நான்கரை ஆண்டுகள் நாங்கள் தரை மட்ட அளவில் ஒத்துழைப்பு தந்தோம். இதன் பின்னர்தான் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை மாற்றி ஒற்றைத் தலைமை என கொண்டு வந்தனர். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications