கைப்பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா, கண்ணீர் விட்ட ஓபிஎஸ்: 4 ஆண்டுக்குப்பின் நேரில் சந்திப்பு
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணத்தை தொடர்ந்து சசிகலா ஓ.பி.எஸ்ஸை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
Recommended Video
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமின் மனைவி விஜயலட்சுமி இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரின் உயிர் பிரிந்தது .
கடந்த இரண்டு வாரமாக சென்னை ஜெம் மருத்துவமனையில் வயிற்றில் உபாதை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

ஆறுதல்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் வரிசையாக வந்து ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் ஸ்டாலின் அணைத்து இரங்கல் தெரிவித்தார். தனது மனைவியின் மரணத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளாத ஓ.பி.எஸ் உடைந்து கண்ணீர் விட்டு அழுதபடி காணப்பட்டார். தொடர்ந்து அழுது, கண்கள் சிவந்து சோகமாக ஓ.பி.எஸ் காணப்பட்டார்.

இரங்கல்
மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி அருகே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அமர்ந்து இருந்தார். ஓ. பன்னீர்செல்வத்திற்கு அருகில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து இருந்தார். முதல்வர் ஸ்டாலினும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அருகருகே இருந்தாலும் அவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. இருவரும் முகத்துக்கு முகம் பார்த்துக் கொள்ளவில்லை.

சசிகலா
இவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி சென்று சில நிமிடங்களில் சசிகலா மருத்துவமனைக்கு வந்தார். ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து இரங்கல் தெரிவிப்பதற்காக சசிகலா மருத்துவமனைக்கு வந்தார். ஓ.பன்னீர்செல்வத்திடம் அவரின் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மாரடைப்பு குறித்த சசிகலா கேட்டறிந்தார்.

நாகரீகம்
பல்வேறு அரசியல் மோதல்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திடீரென சசிகலா இப்படி மருத்துவமனைக்கு வந்தது அங்கிருந்த அதிமுகவினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் காலையிலேயே வந்துவிட்டு சென்றது, அதன்பின் சசிகலா வந்தது என்று இன்று மருத்துவமனையில் தமிழ்நாடு தலைவர்கள் அரசியல் நாகரீகத்தோடு நடந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

4 ஆண்டுகள்
4 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. கடைசியாக ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக மெரினாவில் தியானம் செய்வதற்கு முதல்நாள்தான் இருவரும் சந்திப்பு நடத்தினார்கள். அதன்பின் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. இந்த நிலையில் இன்று சசிகலா ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications