ஆபாச பேச்சு.. பெண்ணுக்கு குரல் கொடுக்க யாருமே இல்லை.. அண்ணாமலையை பாராட்டி திமுகவை விளாசிய குஷ்பு
சென்னை: பாஜக பெண் நிர்வாகியிடம், ஓபிசி பிரிவு பொதுச்செயலாளாராக உள்ள சூர்யா ஆபாசமான வார்த்தைகளை பயன்டுத்தி திட்டி மிரட்டல் விடுத்தது பற்றி விசாரணைக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதனை பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு பாராட்டிய நிலையில் திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு கட்சியில் புதிய பதவி வழங்கப்பட்டது.
சூர்யா, பாஜக ஓபிசி பிரிவில் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் சூர்யா திமுகவையும், கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஆபாச பேச்சு
இந்நிலையில் தான் சூர்யாவுக்கும், பாஜகவை சேர்ந்த மாநில சிறுபான்மை அணி தலைவர் டெய்சிக்கும் இடையே கட்சி விவகாரங்கள் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சூர்யா, அந்த பெண் நிர்வாகியை ஆபாசமான வார்த்தைகளை கொண்டு திட்டினார். மேலும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சூர்யா பேசி இருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரிக்க உத்தரவு
இந்நிலையில் தான் பாஜக பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக விசாரிக்க கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை விசாரித்து ஏழு நாட்களுக்குள் கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை சூர்யா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு ட்விட்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு கருத்துகள் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நான் வன்மையான கருத்துகளால் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டபோது வாய்மூடி பார்வையாளர்ளாக இருந்தவர்கள் தற்போது என்னிடம் துணிச்சலாக கேள்வி கேட்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. இந்த விவகாரங்களில் தேர்வு செய்து மூளையை குருடாக்கி உள்ளவர்கள் முழுக்க முழுக்க பெண் மீதான வெறுப்புணர்வை கொண்டுள்ளனர். ஒரு பெண்ணுக்காக குரல் கொடுக்க யாருக்கும் தைரியம் இல்லை என்பது எனக்கு தெரியும். நீங்கள் அனைவரும் அரசியல் நாடகமாடுகிறீர்கள்.

அண்ணாமலைக்கு பாராட்டு
எங்கள் தலைவர் (அண்ணாமலை) மூலம் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இறந்த உடலை வைத்து கூட கேவலமான அரசியல் செய்யும் கட்சிகளில் இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சி. எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடந்த ஆடியோ பேச்சு தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை எடுத்துள்ள நிலைப்பாட்டை பாராட்டுகிறேன். பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியான கருத்துக்கள் எந்த நேரத்திலும் பொறுத்து கொள்ளப்படாது'' என குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனத்துக்கு காரணம் என்ன?
முன்னதாக திமுக கட்சியை சேர்ந்த சைதை சாதிக் என்பவர், நடிகை குஷ்பு பற்றி தவறாக பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது சர்ச்சையான நிலையில் சைதை சாதிக்கு மன்னிப்பு கோரினார். இதனை குஷ்பு ஏற்காத நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறி வருகிறார். மேலும் இந்த விவகாரத்தில் தனக்கு சப்போர்ட் செய்யாதவர்கள் தற்பாது கேள்வி கேட்பதாகவும் குறிப்பிட்ட விவகாரங்களில் தான் குரல் கொடுப்பதாகவும் நடிகை குஷ்பு கூறி திமுகவினரை விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications