பெட்டிக்குள் இருந்த சகோதரியின் எலும்புக்கூடு! வங்கியில் நபர் பகீர்! ரூ.50000 கிடைத்த பின்னணி இதுதான்
சென்னை: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜீது முண்டா என்பவர், உயிரிழந்த தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தை எடுப்பதற்காக அவரது எலும்புக்கூட்டை வங்கிக்கு எடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு ஜீது முண்டாவுக்குத் தேவையான சட்டப்பூர்வ ஆவணங்களை விரைந்து வழங்க ஏற்பாடு செய்தது.
ஒடிசாவில் கேந்துஜர் மாவட்டம் தியாநலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீது முண்டா. 50 வயதான ஜீது முண்டாவின் மூத்த சகோதரி கல்ரா முண்டா, கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். கல்ரா தனது கணவர் மற்றும் மகனை ஏற்கனவே இழந்தவர் என்பதால், இறுதி காலத்தில் தனது தம்பியுடன் வசித்து வந்தார். அவர் ஒடிசா கிராமிய வங்கியின் மல்லிபாசி கிளையில் சுமார் 19,400 ரூபாய் வரை சேமிப்பு வைத்திருந்தார்.

ஒடிசா வங்கி சம்பவம்
சகோதரியின் மறைவுக்குப் பிறகு அந்தப் பணத்தை எடுக்க ஜீது முண்டா பலமுறை வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், வங்கியின் நடைமுறைப்படி இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் பணத்தை வழங்க வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
வங்கியின் விதிமுறைகள் சரியாகப் புரியாத நிலையில், "கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள்" என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து ஜீது இந்த முடிவை எடுத்துள்ளார். பலமுறை அலைந்தும் பணம் கிடைக்காத விரக்தியில், புதைக்கப்பட்டிருந்த தனது சகோதரியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதிலிருந்த எலும்புக்கூட்டை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி வங்கிக்குச் சுமந்து வந்துள்ளார்.
சகோதரி எலும்புக்கூடு
வங்கியின் வராண்டாவில் அந்த எலும்புக்கூட்டை வைத்த ஜீது முண்டா, "இதோ என் சகோதரி இறந்துவிட்டதற்கான ஆதாரம்" என்று கூறி அங்கிருந்தவர்களை அதிர வைத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த வங்கியின் மண்டல மேலாளர், ஜீது முண்டா வங்கிக்கு வந்தபோது அவர் மதுபோதையில் இருந்தார்.. வங்கித் தரப்பில் ஒருபோதும் எலும்புக்கூட்டை எடுத்து வருமாறு கூறவில்லை.. , முறைப்படி கிராமத் தலைவரிடமிருந்து ஒரு கடிதத்தையோ அல்லது இறப்புச் சான்றிதழையோ மட்டுமே கேட்டோம்..
வாரிசுச் சான்றிதழ் போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் இல்லாததே பணத்தை விடுவிப்பதில் தாமதம் ஏற்படக் காரணம்" என்று வங்கி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஜீது முண்டாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த எலும்புக்கூட்டை மீண்டும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இச்சம்பவம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு ஜீது முண்டாவுக்குத் தேவையான சட்டப்பூர்வ ஆவணங்களை விரைந்து வழங்க ஏற்பாடு செய்தது.
வங்கி தந்த நல்ல தீர்வு
இதனையடுத்து, வங்கியிலிருந்த 19,402 ரூபாய் பணம் முழுமையாக ஜீது முண்டாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அவரது வறுமை நிலையை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப் பெறுவதற்கு ஒரு நபர் எலும்புக்கூட்டை எடுத்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல ஜீது முண்டாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அந்த எலும்புக்கூட்டை மீண்டும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியின் தலையீட்டின் பேரிலும், அவரது வறுமை நிலையை உணர்ந்தும் மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஜீது முண்டாவுக்கு ₹30,000 நிதியுதவி வழங்கியுள்ளது. இந்தத் தொகை மாவட்ட ரெட் கிராஸ் நிதியிலிருந்து வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications