தென் தமிழகத்தில் தொழில் தொடங்கினால் சென்னையில் அளிப்பதை விட அதிக சலுகை.. முதல்வர் அறிவிப்பு
மதுரை: தென் தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு சென்னையில் அளிப்பதை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் நிலத்திற்கு மானியம் வழங்கப்படும் என்று. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு முதல்வர் பேட்டி அளிக்கையில், "இ-பாஸ் முறையை எளிதாக்க கூடுதலாக ஒரு குழு அமைக்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது.
மாவட்டத்திற்கு 2 குழு அமைப்பு.. இனி உடனுக்குடன் இ பாஸ் வழங்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு
எளிதாக இ-பாஸ்
இப்போது கூடுதலாக ஒரு குழு அமைக்கப்படுகிறது. 500 பேருக்கு பாஸ் கிடைத்திருந்தால் இனி கூடுதலாக இ-பாஸ் கிடைக்கும். தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு இ-பாஸ் வழங்க எந்த தடையும் இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸை பயன்படுத்த வேண்டும்.
கொரோனா குறைந்தது
மக்களுக்கு இடையூறு செய்வதற்காக இ-பாஸ் முறை உருவாக்கப்படவில்லை. மக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதை தடுக்க இ-பாஸ் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாகவே மதுரையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை தமுக்கம் மைதானத்தில் கலாசார மையம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்து. மதுரை மாவட்டத்தில் இதுவரை 1,63000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது, கொரோனா உயிரிழப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வர வேண்டும். 12000 காய்ச்சல் முகாம் மதுரை மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும்.
தென் மாவட்டங்களில்
தென் தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு சென்னையில் அளிப்பதை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் நிலத்திற்கு மானியம் வழங்கப்படும்.305 கோடி மதிப்பில் அரசு ராஜாஜி மருத்துவமனை மேம்படுத்தப்பட உள்ளது. 103 கோடியில் புதிதாக 500 ஆம்புலன்ஸ் வாங்கப்பட உள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 1890 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வைகையாற்றை மேம்படுத்த 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1250 கோடி மதிப்பில் லோயர் கேம்பி இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.