பழைய ஓய்வூதியம்.. சென்னை தலைமை செயலகத்தில் ட்விஸ்ட்.. அரசு ஊழியர்கள் செய்த சம்பவம்
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள், கூட்டமைப்பினர், பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு கடந்த மாதம் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினரும், கூட்டமைப்பினரும் முதல்வரை சந்தித்து இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்கள்.ஆனால் திடீர் திருப்பமாக நேற்று தலைமை செயலகத்திலேயே 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் நேரத்தில் பழைய ஓய்வூதியம் குறித்து பரிசீலிக்க குழு அமைப்போம் என்றும், அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தது. ஆட்சிக்கு வந்த 4.5 வருடங்களை கடந்த நிலையில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் கோரி போராட்டங்களை கடந்த ஒரு மாதமாக முன்னெடுத்தனர். ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசு ஊழியர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து கடந்த ஜனவரி 4ம் தேதி தமிழக அரசு ஓய்வூதியம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. பழைய, புதிய மற்றும் என்பிஎஸ் எனப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் என எதுவும் இல்லாமல், பழைய மற்றும் மத்திய அரசு ஓய்வூதியம் ஆகியவற்றை மிக்ஸ் செய்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினரும், கூட்டமைப்பினரும் முதல்-அமைச்சருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.
முதல்-அமைச்சரும் அவர்களுக்கு இனிப்பு ஊட்டினார். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலக சங்க அலுவலகத்துக்கு வெளியே 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குவிந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அங்கிருந்தவர்கள் கூறும் போது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வரும் தொகையை அரசே எடுத்துக்கொள்ளும் என்றுதான் எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதுபற்றிய சரியான விளக்கம் இல்லை. ஆனால் அதுபற்றி உறுப்பினர்களிடம் கேட்காமல், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு சங்க நிர்வாகிகள், சம்மதித்துவிட்டார்கள் புதிய திட்டப்படி 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை அரசிடம் வலியுறுத்தும்படி சங்க நிர்வாகிகளை வலியுறுத்துகிறோம் என்றார்கள். இதனால் நேற்று தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன
* மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
* 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
* ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
* அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
* புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
* பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (சி.பி.சி.) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications