ஆடி போய் ஆவணி வரட்டும்.. டாப்ல போகப் போறாங்க அரசு ஊழியர்கள்! தமிழக அரசு தரப் போகும் சூப்பர் சர்ப்ரைஸ்
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு வர இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அறிக்கை அளிக்க ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30ஆம் தேதி முதலமைச்சரிடம் அறிக்கை அளிக்க இருக்கிறது. அதற்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.
திமுக ஆட்சி என்றாலே அரசு ஊழியர்களுக்கு ஆதரவான அரசு என்பதுதான் பல ஆண்டுகளாக தமிழகத்தில் சொல்லப்படும் கருத்து. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.
அந்த வகையில் 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளதாக அதிமுகவினர் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. காரணம் தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தான் அமலில் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அப்போது அதனை நடைமுறைப்படுத்தின.
ஆனால் அதில் பல்வேறு குறள்படிகள் இருப்பதாகவும் அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என சில மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். தமிழகத்திலும் பிரச்சினை வெடித்தது. ஆனால் தற்போது வரை தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தான் அமல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பங்களிப்பு ஓய்வு திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்து நான்காண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் பயணிக்கிறது. ஜனவரி மாதத்தில் இருந்து தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிடும் என்பதால் இந்த ஆண்டுக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர் அரசு ஊழியர்கள்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எவ்வித அறிவிப்பு வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப் பலன் பெறுவது, திருமண நிதி உயர்வு, அரசு ஊழியர்களுக்கு காப்பீடு என 9 அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு மட்டும் வராதது அரசு ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
இதை அடுத்து ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை தர தமிழ்நாடு அரசு ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. தொடர்ந்து அந்த குழுவினர் அரசு ஊழியர்கள், பல்வேறு மாநிலங்களில் இருக்கும் நடைமுறை ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அந்த குழு தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை தர இருக்கிறது.
அந்த அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கப்பட்டாலும் இரண்டு மாதங்களுக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் அல்லது அதற்கு முன்னதாக செப்டம்பர் மாதத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் மனதில் வைத்து நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்கின்றனர் திமுகவினர். மேலும் செப்டம்பர் மாதத்தில் நல்ல அறிவிப்பு வரும் என ஏற்கனவே அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் அரசு ஊழியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications