40 அடி கிணறு.. அப்படியே டைவ்.. ஒன்றரை வயசு பேத்தியை வெற்றிகரமாக காப்பாற்றிய பாட்டி!
கிணற்றுக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை பாட்டி ஒருவர் மீட்டுள்ளார்.
சென்னை: நீச்சல் தெரியுமா, தெரியாதா என்றெல்லாம் யோசிக்க பாட்டிக்கு நேரமில்லை.. 40 அடி ஆழ கிணற்றுக்குள் தத்தளித்து கிடந்த ஒன்றரை வயசு பேத்தியை அப்படியே டைவ் அடித்து காப்பாற்றி உள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் வசித்து வருபவர் கிருபாவதி. இவருடைய மகள் அரிபிரியாவுக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பிரக்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் எட்டி பார்த்து கொண்டிருந்தது. அப்போது கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அந்த கிணறோ 40 அடி ஆழத்தில் இருக்கிறது. 3 அடி அகலம் கொண்டது. அதில் 4 அடிக்கு தண்ணீரும் இருந்தது.
ஆனால் எதையுமே யோசிக்காத பாட்டி கிருபாவதி, பேத்தியை காப்பாற்ற ஓடிப்போய் கிணற்றில் குதித்தார். கொஞ்சம் விட்டிருந்தால் குழந்தை நீரில் மூழ்கியிருக்கும். பிறகு எப்படி கிணற்றுக்குள் இருந்து மேலே வருவது என தெரியாமல் பாட்டி விழித்து கூச்சலிட்டார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள், பாட்டி-பேத்தியை மீட்டனர்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பேத்தி, பாட்டி இருவருமே கிணற்றில் விழும்போது, எதன்மீதும் மோதாமல் தண்ணீரில் விழுந்துள்ளனர். அதனால் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.