Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடம் பிடிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்.. ஆபீஸை மாற்ற அவகாசம் வேண்டுமாம்! அரசிடம் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட்டு போகமாட்டோம் என அடம்பிடித்து வருகின்றன. இடம் மாற கூடுதலான நாட்கள் அவகாசத்தையும் கோரியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

Omni bus owners demand more time to switch to Kilambakkam


ஆனால் இவர்களுக்கான முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தாம்பரம், திருவான்மியூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை குறைந்த எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கோயம்பேடு வந்தால்தான் பஸ் கிடைக்கும் என்கிற சூழல் இருக்கிறது. அப்படியே கோயம்பேடு வந்து பஸ் கிடைத்தாலும் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

இந்த பிரச்னையை சமாளிக்கத்தான் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இவை முடியும்போது திட்டமிட்டதைவிட கூடுதலாக 25 சதவிகிதம் செலவை இழுத்தன. இருப்பினும் ஒரு வழியாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அது பயன்பாட்டுக்கு வந்தது.

இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோயம்பேட்டில் தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். கிளாம்பாக்கத்திற்கு எடுத்துச்செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார்.

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, “கோயம்பேடு பேருந்து நிலையத்தைவிட பெரிய அளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை. பயணிகளின் வசதியையொட்டி நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பிரச்னையில் சுமூக தீர்வு காண வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து துறை தயாராக உள்ளது” என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் சிஎம்டிஏ நிர்வாகம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழக இயக்குநர்கள், பொது மேலாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்,

“ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகரின் எல்லைக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும். அதேபோல கிளாம்பாக்கம்தான் எங்கள் எதிர்காலம் என்று தீர்வாகிவிட்ட நிலையில், இங்கிருந்து அங்கு அலுவலகங்களை மாற்ற எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளோம். அதேபோல குறிப்பிட்ட கால அவகாசம் என்ன? அதுவரை பயணிகளை எங்கு ஏற்றுவீர்கள்? எங்கு இறக்குவீர்கள்? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்கள். இதனை இரண்டு நாட்களுக்குள் பேசி தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கோரிக்கைகளை அவர்கள் முழுவதுமாக கேட்டிருக்கிறார்கள். இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+