தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்.. கற்பூரத்தை, ஏற்றி, தேங்காயை உடைத்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகள்!
சென்னை: கற்பூரத்தை, ஏற்றி, தேங்காயை உடைத்து ஆறு மாதத்திற்கு பிறகு ஆம்னி பேருந்துகள் இன்று உற்சாகமாக கிளம்பின. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத சாலைவரிக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியுடன் நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்து சேவை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் புறப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை தடுக்க அரசு மார்ச் மாதம் முதல் பஸ்-ரயில் உள்பட அனைத்து பொது போக்குவரத்து சேவையையும் ரத்து செய்தது. அதன்பிறகு சுமார் 5 மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதம் அரசு அளித்த ஊரடங்கு தளர்வு காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவை படிப்படியாக தொடங்கியது.

மாவட்டம் விட்டு மாவட்டம்
இதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் ,இயங்க தொடங்கின. வழக்கமான வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் தமிழகத்தின் எந்த பகுதிக்கும் இப்போது எளிதாக சென்று வர முடிகிறது.

இயங்காத பஸ்கள்
எனினும் அரசு பேருந்துகளே இயங்கி வந்தன. அதுவும் குறைந்த அளவே இயங்கி வந்தததால் போதிய அளவு பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையும் இருந்து வந்தது. ஏனெனில் ஆம்னி பேருந்துகளை இயக்க அதன் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். "ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத சாலைவரியை ரத்து செய்தால்தான் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியும் என்று தெரிவித்தனர்.

கோர்டில் வழக்கு
இந்தநிலையில் ஆம்னி பேருந்து உரிமையார்கள் சாலைவரி ரத்து செய்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு சாதமான தீர்ப்பு கிடைத்தது. இது பற்றி அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி விவாதித்தனர். இதன்படி 16-ந்தேதி (இன்று) முதல் ஆம்னி பஸ்களை இயக்குவது என்றும் தீர்மானித்தனர்.

தூய்மையான பேருந்துகள்
அவர்களின் முடிவின் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பளீச் என தூய்மை செய்யப்பட்டன. சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ்கள் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பராமரிப்பு பணிகளும் தீவிரமாக நடந்தன. பேருந்துகளில் ஆறுமாதங்களாக கிடந்த ஜன்னல் திரை, இருக்கை துணிகள் அகற்றி புதியவற்றை மாற்றினர்.. நேற்று மாலை முதலே பேருந்துகள் இயங்க தயார்படுத்தினர்.

ஆம்னி பேருந்துகள் இயக்கம்
இன்று அதிகாலை 3 மணி முதலே ஆம்னி பேருந்துகள் இயங்க தொடங்கின. கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் ஆம்னி பேருந்துகளை டிரைவர்கள் இயக்கினர். கொரோனா காரணமாக 6 மாதங்களாக ஓடாமல் இருந்த ஆம்னி பஸ்கள் புறப்பட தொடங்கியதை கேள்விப்பட்டு பலர் ஆன்லைனில் புக்கிங் செய்து வருகிறார்கள்.பலர் நேரில் வந்து டிக்கெட் புக்கிங் செய்தனர். ஆறு மாதத்திற்கு பிறகு கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் களைகட்டத்தொடங்கி உள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், டிரைவர்கள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், "ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத சாலைவரிக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகளை இயங்குவோம். அதற்கு . பயணிகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம். தற்போதைய சூழலில் முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்குவது என்றும், பஸ்களில் 60 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம்", என்றார்.












Click it and Unblock the Notifications