ஆம்னி பஸ்களில் 4 ஆயிரம் கட்டணம்.. தென் மாவட்ட பயணிகள் அதிர்ச்சி.. ரயில்களிலும் அலைமோதும் கூட்டம்
சென்னை: கோடைக்கால விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் எல்லாரும் மீண்டும் சென்னை திரும்பி வருகிறார்கள். ஒரே நேரத்தில் அதிகம் பேர் மொத்தமாக திரும்புவதால் ஆம்னி பஸ்களில் பல மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரையில் இருந்து சென்னை வரும் ஆம்னி பஸ் ஒன்றில் டிக்கெட் ரூ.3999க்கு விற்கப்பட்டது.
தமிழகத்தில் கோடைக்கால விடுமுறை முடிந்து நாளை திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகிறார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை அறிந்து நேற்றே பெரும்பாலானோர் சென்னை திரும்பினர். இதனால் நேற்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பஸ்களில் அளவுக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
ஏற்கனவே ரயில்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு ஆகிவிட்டதால், அரசு பஸ்களை புக் செய்யவும் பயணிகள் இடையே போட்டா போட்டி இருந்தது. இதில் அரசு பஸ்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனால் சென்னை செல்லும் பயணிகள் மதுரை வரை வந்தும், பின்னர் திருச்சி என மாறி மாறி ஏறி இறங்கி சென்னை வந்தடைகின்றனர்.
பஸ்கள், ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக புக் ஆகின. மதுரையில் இருந்து சென்னை வரும் ஆம்னி பஸ்களில் ரூ.4,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் பயணிகள் ஷாக் ஆகினர். எனினும் எப்படியாவது போய் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த விலை கொடுத்தாவது சென்னை சென்றுவிட வேண்டும் என பயணிகள் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்தும் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பஸ்களிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. நேற்று இயக்கப்பட்ட பஸ்கள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பியது. சென்னையை நோக்கி ஏராளமான வாகனங்கள் நேற்று ஒரே நாளில் அணிவகுத்ததால் சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன
அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரயில்கள் மட்டுமின்றி சொந்த வாகனங்களிலும் பலர் சென்னை திரும்புகிறார்கள். இதனால் நேற்றைவிட இன்று அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்றும் பயணிகள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications