ஆம்னி பஸ்கள் ரிலீஸ்.. வரி செலுத்திய ஆம்னி பஸ்கள் இன்று விடுவிப்பு.. தமிழக அரசு வைத்த "செக்" பாருங்க
சென்னை: கூடுதல் கட்டணம் உள்ளிட்ட விதிமுறை மீறலுக்காக பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில், வரி செலுத்திய பஸ்கள் மட்டும் இன்று விடுவிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அரசுக்கு நன்றியை தெரிவித்து கொண்டுள்ளனர்.
பொங்கல், புத்தாண்டு, ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில், ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் அதிகமாகிவிடுவது இயல்பாகிவிட்டது. இப்போதும் அதே குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே உள்ளன.. இதுகுறித்து தமிழக அரசும், விதிமுறைகளை மீறக்கூடாது என்று எச்சரித்தபடியே உள்ளது.

கட்டண கொள்ளை: எனினும், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, கட்டண கொள்ளையைத் தடுக்க முடியவில்லை என்றே தெரிகிறது.. இதையடுத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையினர், பரவலாக ஆம்னி பஸ்களில் அதிரடி சோதனை நடத்தி, அந்த பஸ்களில் பயணித்த பயணிகளிடம், வசூலிக்கப்பட்ட கட்டண விபரங்களை சேகரித்ததில், கட்டணங்களில் விதிமீறல் நடந்ததையும் கண்டுபிடித்தனர்.
கடந்த 18ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரையிலான, 4 நாட்களில், 8,635 பஸ்கள் சோதனை செய்யப்பட்டதில், 119 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறை பிடித்தனர். மேலும் 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது..
அரசின் இந்த நடவடிக்கையானது, ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்த நிலையில், விதிகளை மீறி இயக்கப்படாத ஆம்னி பஸ்களை விடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
பேச்சுவார்த்தை: பின்னர், பேருந்துகளை பறிமுதல் செய்ததை கண்டித்து, திடீரென ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது.. ஆனால், உடனடியாக நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம், ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட 119 ஆம்னி பஸ்களில்,, வரி கட்டிய பஸ்கள் மட்டும் இன்று விடுவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறைபிடிப்பு: இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்லும்போது, "சிறைபிடிக்கப்பட்ட 119 பேருந்துகளில், வரி கட்டிய பேருந்துகள் இன்று விடுவிக்கப்படும் என்று போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பஸ்களையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்... பஸ்களை விடுவிக்க உத்தரவு பிறப்பித்ததற்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications