தி.நகர் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் ரகசியமாக பாலியல் தொழில்.. தேடப்படும் புரோக்கர் பானு!
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் விபச்சார தொழில் நடந்து வந்ததை கண்டுபிடித்த போலீஸார், அதற்கு உதவிய நபரை கைது செய்துள்ளனர். தி.நகரில் உள்ள அந்த சர்வீஸ் அப்பார்ட்மென்டுக்கு அடிக்கடி பெண்கள், ஆண்கள் வருவதை ரகசிய தகவல் மூலம் கண்டறிந்த போலீசார் அதிரடியாக ரெய்டு சென்று கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் நரசிம்மா சாலை, 1-வது தெருவில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மென்ட் ஒன்றில் அடிக்கடி பெண்கள், ஆண்கள் வந்துபோய் இருக்கிறார்கள். இந்நிலையில் அங்கு பாலியல் தொழில் நடப்பது போலீஸ் இன்பார்மர் மூலம் ரகசிய தகவல் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது,

அதன்பேரில் துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் தனிப்படை போலீஸார் விரைந்து சென்றனர்.அங்கு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த கார்த்திக்கேயன் (26) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒரு பெண்ணையும் போலீஸார் மீட்டனர். இந்த வழக்கில் கிளப்பின் உரிமையாளர் இளையராஜா மற்றும் பிரபல இடைத்தரகர் பானு ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சர்வீஸ் அப்பார்ட்மென்டில் பாலியல் தொழில் எப்படி நடந்தது என்பது குறித்த விவரித்த போலீசார், அந்த கும்பலுக்கு ஒரு ஸ்பா மற்றும் கிளப் இருக்கிறதாம். அதில் வரும் வாடிக்கையாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்திற்கு சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இதை கண்டறிந்து திடீர் ரெய்டு நடத்தி அக்கும்பலைச் சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவரைப் பிடித்திருக்கிறோம் என்றார்கள்.
முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை, தேனாம்பேட்டை, அண்ணாசாலையிலுள்ள பிளாசா ஒன்றின் 6-வது மாடிக்கு போலீசார் ரெய்டு சென்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவின் துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில், பாலியல் தொழில் தடுப்புப்பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் இந்த ரெய்டுக்கு சென்றனர்.
அந்த பிளாசாவில் மசாஜ் என்ற பெயரில் வெளிமாநிலங்கள், சென்னையைச் சேர்ந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இந்த ஸ்பாவை சதீஷ் என்பவர் தன்னுடைய கூட்டாளி ஸ்ரீ சஞ்சீப் ராய் என்பவருடன் சேர்ந்து நடத்திவந்ததாக கூறப்படுகிறது. ஸ்பாவை நடத்தி வந்தவரின் கூட்டாளியான ஸ்ரீ சஞ்சீப் ராய், பெங்களூரைச் சேர்ந்த கிளப் ஒன்றின் டீம் லீடர் வினோத் குமார் ஆகியோரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அங்கிருந்து தமிழ் பெண்கள் இரண்டு பேரையும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்களையும் மீட்டனர். விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் தொழில் நடக்கும் இடங்களை தீவிரமாக கண்காணித்து அதிரடியாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications