இன்று முதல் தமிழகத்தில் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதிய நடைமுறை
சென்னை: தமிழகத்தில் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதிய நடைமுறை இன்று முதல் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
பொது விநியோக திட்டத்தை சீரமைத்து, உரிய பயனாளிகளுக்கு உரிய முறையில் அவரவர்களுக்கான இன்றியமையா பண்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வண்ணம் உடற்கூறு முறையிலான சரிபார்ப்பு (பயோ மெட்ரிக் ஆதன்டிகேஷன்) ஒருங்கிணைந்த 'ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய மாற்றத்தால் சிரமம்
இத்தகைய புதிய நடைமுறையின் செயலாக்கத்தில் குடும்ப அட்டைதாரர்கள் இன்றியமையாப் பண்டங்கள் பெறுவதில் சிரமம், காலதாமதம் நேரிட்டிருப்பது ஆய்வுகளில் தெரியவந்தது. எனவே அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்கள் இன்றியமையா பண்டங்களை எவ்வித சிரமமும் இன்றி பெற்றுச்செல்லும் வகையில் விற்பனை முனைய எந்திரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
அனைவருக்கும் ரேஷன்
அது இன்று (புதன்கிழமை) முதல் செயலாக்கப்படும். இதனால், ரேஷன் அட்டைதாரர்கள் சிரமமின்றி பொருட்கள் பெற இயலும். மேற்குறிப்பிட்டுள்ள வசதி ரேஷன் அட்டைதாரர்களின் தற்போதைய சிரமத்தை குறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடு என்பதனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட் கள் கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு ஸ்கேன்
முன்னதாக கடந்த வாரம் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கைரேகை இல்லாவிட்டாலும் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.அதாவது கைரேகை வேலை செய்யாதபட்சத்தில் ஒடிபி அடிப்படையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுவும் இயலாதபட்சத்தில் ரேஷன் அட்டையை (ஸ்மார்ட் கார்டு) ஸ்கேன் செய்யும் முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது,
நவம்பர் வரை இலவசம்
ஒரு நாடு , ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பபட்டுள்ளதால் தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி பொருட்களை வாங்கி கொள்ள முடியும். இந்த திட்டப்படி வெளிமாநிலத்தவருக்கும் பொருட்கள் வழங்கப்படும். தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக நவம்பர் வரை விலையில்லாமல் ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.