தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி.. 110 விதியின் கீழ் முதல்வர்: அன்றே கூறிய ஒன்இந்தியா தமிழ்
சென்னை: தமிழக அரசு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்காமல், சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் அதை அறிவிப்பார் என்று நாம் முன்பு கூறியிருந்தோம். அதன்படி முதல்வர் அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது தமிழகம் முழுவதுமுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என்று முதல்வர் விதி எண் 110ன் கீழ் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் 35 லட்சம் ஏழைக் குடும்பங்கள் மற்றும் நகர்ப் புறங்களில் வாழும் 25 லட்சம் ஏழைக் குடும்பங்கள் என மொத்தம் 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி இன்று சட்ட சபையில் விதி எண் 110 ன் கீழ் அறிவித்துள்ளார்.
இப்படி விதி எண் 110 ன் கீழ் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வரும் என ஒன்இந்தியாதமிழ் ஏற்கனவே கூறியிருந்தது. தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கோ மீனவர்களுக்கோ அல்லது அரசு ஊழியர்களுக்கோ எந்தவித அசரடிக்கும் அறிவிப்புகளும் இல்லாமல் இருந்தது. மத்திய பட்ஜெட்டை பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று எதிர்கட்சிகள் வர்ணித்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் இப்படி கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது மக்களை ஏமாற்றம் அடையச் செய்தது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வித்ததிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. மாறாக முதல்வரே இவற்றை சட்டசபையில் அறிவிப்பார் என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படியே பட்ஜெட் அறிவிக்கப்பட்ட மூன்றாவது நாளான அதாவது பட்ஜெட் அறிவிக்கப்பட்ட சட்டசபைக்கு அடுத்த வேலை நாளான இன்று முதல்வர் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன் பெறவுள்ளன. இதனையடுத்து இன்னும் சில அறிவிப்புகளும் விதி எண் 110 ன் கீழ் வெளிவரவுள்ளன என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆக, அடிக்கடி அம்மா வழியில் நடக்கிறோம் என்று கூறும் அதிமுகவினர் எதில் நடக்கிறார்களோ இல்லையோ விதி எண் 110ல் அறிவிப்புகளை வெளியிடுவதில் நிச்சயம் ஜெயலலிதாவைத்தான் பின்பற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி என்பது மறுக்க முடியாத உண்மை. பட்ஜெட்டில் வந்தாலும் சரி விதி எண் 110 ல் வந்தாலும் சரி மக்கள் மகிழ்ந்தால் சரிதான்.












Click it and Unblock the Notifications