இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா.. தினம் தினம் புது உச்சம்! இனி தனிமைப்படுத்தவும் கஷ்டம்.. அடுத்து?
சென்னை: இந்தியாவில் தினம் தினம் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை என்பது புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் புதிய பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
Recommended Video
கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 88 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. இது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என்கிறது சுகாதாரத்துறை புள்ளிவிவரம்.
நேற்றைய புள்ளிவிவரத்தை எடுத்து பார்த்தால், அன்றைய தினம் அதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் என்று அறிவிப்பு வெளியாகி இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். இப்படி ஒவ்வொரு நாள் புள்ளிவிபரம் வரும்போதும், இன்று இந்தியாவில் அதிக பட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகிறது.

ஆட்டோ, டாக்சி
ஆனால், ரயில்களுக்கான முன்பதிவு ஆரம்பித்துள்ளது. வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்குவதாக அறிவித்துள்ளது சிவில் ஏவியேஷன் துறை. மற்றொரு பக்கம் மாநில அரசுகள் தங்கள் பங்குக்கு பஸ்களை இயக்குகின்றன. ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளன. தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.

அதிகரிக்கும் நோய் பிரச்சினை
மக்கள் நெருக்கமாக பழக ஆரம்பிக்கும்போது இந்த பிரச்சனை இன்னும் அதிகரிக்கும். கடுமையான ஊரடங்கு அமலில் இருந்த கூடிய நாடுகளில் கூட, கொரோனா வைரஸ் தாக்கம் என்பது அதிகரித்து வருகிறது. சீனாவில் இரண்டாவது அலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பொருளாதார வளத்தைப் போலவே, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் கடும் வேகத்தில் உள்ளது. இந்த நாடுகளை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில், நிலைமை என்னாகும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இனிமேல் எப்படி தனிமைப்படுத்துவார்கள்
இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளவர்களை, சொந்த மாநிலத்துக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் அல்லது ரயில்கள் இயக்கப்படுகின்றன. அப்படி வருவோருக்கு, 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது கட்டாயமாகும். ஆனால், பொது போக்குவரத்து இயங்கு வதற்கு அனுமதி கொடுத்த பிறகு தனிமைப்படுத்தல் எவ்வாறு சாத்தியப்படும் என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களை கர்நாடகா அனுமதிக்கவில்லை. அப்படியும் மீறி வந்தால், 14 நாட்கள் ஓட்டல்களில் தங்கி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட அளவே ஹோட்டல்களில் அறைகள் இருக்கும் நிலையில் பொதுப்போக்குவரத்து துவங்கிய பிறகு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வரும்போது அவர்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுவார்கள்? அதற்கான வசதிகள் இருக்கிறதா? அப்படியானால் அவர்கள் வீடுகளில் தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பித்த பிறகு வீடுகளில் 14 நாட்கள் தங்கி இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

சிறப்பு ரயில்கள் சரி
இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வல்லரசு நாடுகளே, திணறி வரும் நிலையில், பொது போக்குவரத்தான ரயில் மற்றும் விமானங்களை இயக்குவது இந்த நேரத்தில் சரியான முடிவாக இருக்காது என்கிறார்கள் தொற்றுநோயியல் வல்லுனர்கள். பிற மாநிலங்களில் சிக்கி தவிக்க கூடிய தொழிலாளர்களை அவர்கள் விரும்பக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான சிறப்பு ரயில்களை இயக்கலாம். வெளிநாடுகளில் சிக்கி தவிப்பவர்களை ஏற்கனவே இயக்குவது போல வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரலாம். பொதுப் போக்குவரத்து அனுமதி கொடுப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் தவறான முடிவாக இருக்க கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications