அய்யோ அம்மா.. கோயம்பேட்டில் வெங்காய விலை மேலும் ரூ.5 அதிகரிப்பு.. உரிக்காமலே வருது கண்ணீர்
Recommended Video
சென்னை: வெங்காயம் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலையில் கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில், வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் பெருமளவுக்கான வெங்காய தேவையை இம்மாநிலங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. ஆனால், சமீபத்தில் பெய்த கனமழையால், வெங்காய பயிர்கள் நாசமடைந்தன. எனவே நாடு முழுக்க வெங்காய வரத்து குறைந்துள்ளது.

இதனால் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்தபடி உள்ளது. ஈரான் உள்ளிட்ட நான்கு நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனாலும், இன்று முன்பைவிடவும் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பொருட்கள் விலை குறைந்தபோதிலும், வெங்காயத்தின் விலை மட்டும் ஏறிவருவதாக கோயம்பேடு வியாபாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். நேற்றைய விலையை விட சின்ன வெங்காயத்தின் விலை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.5 கூடியுள்ளது. இன்று கோயம்பேட்டில் கிலோ சின்ன வெங்காயம் ரூ.85 என்ற அளவில் உள்ளது.
பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.66 ரூபாயாக அதிகரித்துள்ளது. விலை குறையும் என்று நினைத்தால், விலை அதிகரித்துள்ளதே என புலம்புகிறார்கள் இல்லத்தரசிகள்.
நாசிக், குஜராத், மஹுவா, பாவ்நகர் ஆகியவற்றிலிருந்து வெங்காய வரத்து, வழக்கம்போல தொடங்கும் போது அடுத்த மாதம் முதல் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மளமளவென உயர்ந்த வெங்காய விலை, கிலோவுக்கு ரூ.80 என்ற அளவை தொட்டது. சில வாரங்கள் பிறகுதான் அது குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications