ஆன்லைனில் தேர்வுகள்.. சட்டென சொன்ன தமிழக பள்ளிக்கல்வித்துறை.. அரசு பள்ளி ஆசிரியர்கள் சொல்வது இதுதான்
சென்னை: 6 வயது குழந்தைகளுக்கு ஆன்லைன் கிளாஸா? இந்த நடைமுறையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதியிலிருந்து காலாண்டு தேர்வு இணையவழியாக நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென 1 முதல் 3ம் வகுப்பு வரை மட்டுமே இணையவழியாக நடத்தவும், 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 20ம் தேதியிலிருந்து வினாத்தாள் மூலம் நடத்தவும் தமிழக பள்ளிக்கல்வியின் சார்பில் உத்தரவிடப்பட்டது.
வினாத்தாள்கள்: அதற்கான வினாத்தாள்களும் ஆன்லைன் ஆப் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதை டவுன்லோடு செய்து நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது..
அதாவது, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், மாநிலம் முழுவதற்கும் ஒரே வினாத்தாளில், தேர்வு நடத்தப்படும் நிலையில், 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியரின் மொபைல் போனில் செயலி வழியாக தேர்வு நடத்தப்படுகிறது.
ஆன்லைன் கிளாஸ்: அதன்படி, ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் ஒவ்வொரு மாணவரையும் அழைத்து, அதில் உள்ள செயலியில் இடம் பெற்று உள்ள, ஆன்லைன் வினாக்களில், சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். இப்படியே, ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வை நடத்த வேண்டும் என்பதே அந்த அறிவிப்பாகும்.

ஆனால், இந்த தேர்வு முறைக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. காரணம், 6 முதல் 8 வயதுடைய குழந்தைகளான மாணவர்களை, செல்போனை பயன்படுத்தி தேர்வெழுத வைப்பது, அவர்களது எழுத்து திறனை பாதிக்கும். அத்துடன், இணையதள பிரச்னையால், செல்போன் முடங்கிவிடும், மாணவர்கள் அதிக நேரம் செல்போனை பார்ப்பதால் கண் பார்வை பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்..
பரிசீலிக்குமா அரசு: அதனால், இந்த ஆன்லைன் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை, முக்கிய முடிவு எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications