உலக தமிழ் மொழி தினம்...தமிழக அரசு விருதுபெற்றவர்களுக்கு இணையவழியில் பாராட்டு விழா
சென்னை : சென்னை - தரமணி உலக தமிழாராய்ச்சி நிறவனம், தமெரிக்கா டிவி, தில்லி கலை இலக்கியப் பேரவை, டோக்கியோ தமிழ்ச் சங்கம், வணக்கம் மலேசியா, அனைத்திந்திய தமிழ்ச் சங்கம், தபம்ஸ் குழுமம், உரத்த சிந்தனை ஆகிய அமைப்புக்கள் இணைந்து பிப்ரவரி 21 அன்று உலகத் தாய்மொழி தினம் 2021 ஐ கொண்டாட உள்ளன.
இதனை முன்னிட்டு தமிழுக்காக தொண்டாற்றியதற்காக தமிழக அரசிடம் விருது பெற்றவர்களுக்கு இணைய வழியில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5.40 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் தலைமை விருந்தினராக தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.க.பாண்டியராஜன் பங்கேற்க உள்ளார்.

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தொடக்க உரையாற்ற உள்ளார். கவுரவ விருந்தினராக அனைத்திந்திய தமிழ் சங்க தலைவரும், அம்மா தமிழ்ப் பீடத்தின் நிறுவனருமான ஆவடி குமார் கலந்து கொள்ள உள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக கனடா-டொரண்டோ தமிழ் இருக்கை கமிட்டியின் தலைவர் சிவன் இளங்கோவும், வடஅமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பியும் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜூம் செயலி வழியாக நடைபெற உள்ள இவ்விழாவில் தமிழக அரசிடம் விருது பெற்ற டாக்டர் வி.ஜி.சந்தோசம், ஜெ.வா.கருப்புசாமி, முனைவர் தீ.மகாலட்சுமி, முனைவர் போ.சத்யமூர்த்தி, கவிஞர் மா.முருக குமரன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட உள்ளது. இவ்விழாவை தில்லி கலை இலக்கிய பேரவையின் செயலாளர் பா.குமார் ஒருங்கிணைக்க உள்ளார். இவ்விழா தமெரிக்கா டிவி.,யில் நேரலை செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications