ஆன்லைனில் கடன்.. குண்டு தயாரிப்பதாக போலிசிடம் கோர்த்து விட்ட லோன் ஆப்.. சென்னை அருகே பரபரப்பு
சென்னை: சென்னை மாங்காடு அருகே வசித்து வரும் கபீர் அகமது, ஆன்லைன் செயலி மூலமாக கடன் வாங்கியுள்ளார். இவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் கபீர் அகமது வெடிகுண்டு தயாரிப்பதாக போலீசிடம் நூதன முறையில் ஆன்லைன் செயலி நிறுவனம் சிக்க வைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் ஏராளமான செயலிகள் உள்ளன. இதுபோன்ற செயலிகளில் அவசர தேவைக்காக பணத்தை கடனாக பெற்றுவிட்டு பிறகு அந்த செயலிகளின் மோசடி வலையில் பலரும் சிக்கி அல்லோலப்படுகின்றனர்.
கூடுதல் வட்டி வசூலிப்பதோடு..பணத்தை முழுமையாக கட்டினாலும் அதிக தொகை கேட்டு இத்தகைய செயலிகள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
கடன் செயலிகளில் லோன் வாங்கிவிட்டு
பணத்தை செலுத்த மறுத்தால் செல்போனில் உள்ள தொடர்புகளை தானாகவே எடுத்துக்கொண்டு நண்பர்களுக்கு உறவினர்களுக்கு மெசேஜ் செய்து துன்புறுத்துவது.. கடன் வாங்கிய நபரை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவது என பல மோசடி வேலைகளிலும் இந்த செயலி நிறுவனங்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுகின்றன. இந்தக் கடன் செயலிகளில் லோன் வாங்கிவிட்டு பிறகு பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிலர் விபரீத முடிவையும் எடுக்கின்றனர்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு
இந்த ஆன்லைன் கடன் செயலிகள் மூலமாக கடன் வாங்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் இதுபோன்ற லோன் ஆப்பில் கடன் வாங்கிக் கொண்டு சிக்கிக்கொள்கின்றனர். கடன் செயலியில் கடன் வாங்கியவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாச அர்ச்சைனை செய்யும் சில ஆடியோக்கள் கூட இணையதளத்தில் பரவி வருவதை பார்த்து இருக்கிறோம்.
சென்னை மாங்காடு அருகே
இந்த நிலையில், ஆன்லைனில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருந்த நபரை நூதன முறையில் போலீசில் சிக்க வைக்க லோன் அப் செயலி முயன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை அருகே உள்ள மாங்காடு முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் கபீர் முகம்மது. இவர் கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கியதால் ஆன்லைன் செயலி மூலமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனக்கூறி கபீர் முகம்மதுவை சிக்க வைக்க லோன் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
போலீசார் விசாரணை
போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஒரு அழைப்பில் ஜப்பானில் இருந்து நாங்கள் பேசுகிறோம்.... மாங்காடு அடுத்த முத்தமிழ் நகரில் கபீர் அகமது என்பவர் வெடிகுண்டு தயாரிப்பதாகவும் கூறி அழைப்பை துண்டித்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்படவே குறிப்பிட்ட இடத்திற்கு மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துக்கொண்டு போலீசார் புறப்பட்டனர். அதன்பிறகே இந்த தகவலில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. விசாரணையில், ஆன்லைன் செயலி மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கியதும் கடனை சரிவர கட்டாததால் கபீர் அகமதுவை சிக்கவைக்க ஆன்லைன் நிறுவனம் முயன்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்சரிக்கை தேவை
ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் வாங்கி அவர்களின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம் என்று போலீசாரும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் சிலர் இதுபோன்ற செயலிகளில் கடன் வாங்கும் போக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடனை செலுத்திவிட்டாலும் கூட கூடுதல் தொகை கேட்பதாகவும் கொடுக்காத பட்சத்தில் மன ரீதியாக துன்புறுத்தி அவர்களை மோசமான முடிவுகளை நோக்கி தள்ளும் வகையில் மிரட்டும் போக்கிலும் இதுபோன்ற நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்த நிறுவனங்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. மக்கள் தங்கள் அவசர தேவைக்கு கடன் தேவைப்பட்டாலும் நம்பகமான அமைப்புகளில் இருந்தே கடன் பெற வேண்டும் என்றும்..இதுபோன்ற செயலிகள் மூலமாக கடன் வாங்கி அவஸ்தை பட வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.