ஆன்லைன் ரம்மி விளையாடியவர் தற்கொலை ! பணமும் போச்சு உயிரும் போச்சு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை கிழக்குத் தாம்பரத்தில் குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என நினைத்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தது மட்டுமின்றி தன்னுடைய இன்னுயிரையும் மாய்த்துக்கொண்டார்.
Recommended Video
கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலையும் செய்து கொண்டதால் அவரது மனைவி மற்றும் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்
சென்னை கிழக்குத் தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ஜெகஜீவன் ராம் தெருவில் வசித்து வந்தவர் முருகன். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். பணிநேரம் போக செல்போனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து இருந்த இடத்திலிருந்தே சீக்கிரம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று நம்பியுள்ளார். அதாவது ஆன்லைன் ரம்மி விளம்பரம் முருகனை மிகவும் கவர்ந்துள்ளது.

கவர்ச்சிகரமான விளம்பரம்
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் தூதுவர்கள் ஒரு மாதத்தில் ஒரு லட்சம் சம்பாதித்தாகவும், ஒரு கோடி சம்பாதிப்பதாகவும் கூறி விளம்பரம் செய்கின்றனர். இதுமட்டுமின்றி பல்வேறு குடும்பங்களை நடுத்தெருவில் கொண்டுவரும் இந்த விளையாட்டு தொடர்பான விளம்பரத்தில் பிரபல விளையாட்டு வீரர்களே நடிக்கிறார்கள். அதாவது கிரிக்கெட் விளையாடாமல் இருந்திருந்தால் ஆன்லைன் ரம்மியில் ஜெயிச்சிருப்பேன் என்றெல்லாம் கூட வசனம் பேசுகிறார்கள்.

விளம்பரத்தை நம்பி ஏமாந்தார்
இதுபோன்ற மாயைகளை நம்பித்தான் பல இளைஞர்கள் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தையும், கடன் கொடுத்தவர்களால் மானம், மரியாதையையும், உயிரையும் இழந்துவிடுகிறார்கள். இந்த விளம்பரத்தை பார்த்து ஏமாந்தவர்களில் முருகனும் ஒருவர், ஆன்லைன் ரம்மியில் விளையாடி ஆரம்பத்தில் லாபம் பார்க்க ஆரம்பித்த முருகன், அதிலேயே மூழ்கினால் வேலைக்கே செல்லவேண்டியதில்லை. கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என முடிவெடுத்துள்ளார்.

பணத்தை இழந்த முருகன்
இதற்காக தன்னுடைய குடும்பத்திற்காக சேமித்து வைத்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த பணம் கிணற்றில் போட்ட கல் போல மூழ்கிப் போனது. இதையடுத்து தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என கொஞ்சம் கொஞ்சமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. எப்படியும் போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என எண்ணிய முருகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாயை ரம்மியில் இழந்துள்ளார் முருகன்.

நெருக்கடி விரக்தி
இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்திருப்பார்கள் போலும். விரக்தியின் உச்சிக்கே சென்ற முருகன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை அனாதையாக தவிக்கவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனை இழந்த அவரது மனைவியும் குழந்தையும் எதிர்காலத்தை நோக்கிய கவலையோடு பிணவறை அருகே முருகன் உடலை பார்க்க காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications