காஸ்ட்லி போனை குறைந்த விலையில் தருவதாக மோசடி.. நம்பி ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி
சென்னை: சென்னையில் மகளின் ஆன்லைன் கல்விக்காக செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் சீட்டுக் கட்டுகள் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில் விலை உயர்ந்த செல்போன் குறைந்த விலைக்கு தருவதாக இருந்தது.
இதை நம்பிய முகமது அலி, தனது மகளின் ஆன்லைன் படிப்புக்காக ரூ 2,999 மதிப்புள்ள செல்போனுக்கு கடந்த 2 ஆம் தேதி ஆர்டர் செய்தார். அவர் அந்த இணையதளத்தில் பதிவு செய்த முகவரிக்கு பார்சல் டெலிவரி செய்ய ஒரு நபர் வந்தார்.
கொரோனா வைரஸ் மரபணு மாற்றம்...தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு தடையாக...இருக்கிறதா?
பார்சல்
செல்போனுக்கு உரிய பணத்தை பெற்றுக் கொண்டுவிட்டு பார்சலை முகமது அலியிடம் கொடுத்தார். அவர் முன்னிலையிலேயே முகமது அலி அந்த பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது அந்த பார்சலில் செல்போனுக்கு பதிலாக சீட்டுக்கட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பார்சலை டெலிவரி செய்ய வந்த இளைஞரை சரமாரியாக அடித்து உதைத்து பள்ளிக்கரணை போலீஸில் ஒப்படைத்தார்.
விசாரணை
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் டெலிவரி கொண்டு வந்த இளைஞருக்கும் மோசடி கும்பலுக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் கொடுத்த பணத்தை போலீஸார் திரும்பவும் பெற்று கொடுத்தனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பணம் பத்திரம்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக கண்ட கண்ட இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொண்டு ஏமாறாதீர்கள். பணத்தை டெலிவரியின் போது முகமது அலி செலுத்தினார். இதனால் அவரது பணம் பத்திரமாக மீட்கப்பட்டது.
பணமோசடி
இதே ஆன்லைனில் பணத்தை செலுத்தியிருந்தால் தற்போது முகமது அலி பணத்தை இழந்திருப்பார். அதே போல் நீங்கள் இத்தனை ஆயிரத்திற்கு பொருட்களை வாங்கியதால் உங்களுக்கு கார், பைக் உள்ளிட்ட பரிசு காத்திருக்கிறது என பல ஆன்லைன் மோசடி நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன.
அழைப்பு
இந்த பரிசை பெற சேவை கட்டணமாக சில ஆயிரங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கூறி ஏமாந்தவர்கள் ஏராளம் பேர் உள்ளார்கள். எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுமாறு போலீஸார் தெரிவித்துள்ளார்கள்.