தீபாவளி பண்டிகை: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் முதல் வரிசையில் உள்ள பட்டாசுகள் ஆண்டுதோறும் புதுவிதமாக விற்பனைக்கு வருகின்றன.

இந்த பட்டாசுகள் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டாசுகளில் தரமும் பாதுகாப்பும் அதிகமாகவே இருக்கும். இதனால் விலையும் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் பாதுகாப்பை விலை கொடுத்து வாங்க தயங்கும் சிலர் விலை குறைந்த கண்களை கவரும் சீன பட்டாசுகளை வாங்குகிறார்கள்.
இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன் தீவிபத்து நடக்கும் அபாயமும் உள்ளது. இதை ஆண்டுதோறும் தமிழக அரசு அறிவுறுத்தியும் பலர் சீன பட்டாசுகளையே நாடுகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வது தொடர்பாக கோரப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு விற்பனைக்காக கோரப்பட்ட இரு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, இறுதியாக கடந்த செப்டம்பர் 29ம் தேதி டெண்டர் கோரப்பட்டதாகவும், இதற்காக 20 லட்சம் ரூபாய் முன்பணம், உத்தரவாத தொகை 2 லட்சம் ரூபாயுடன், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த தகுதியும் இல்லாத "சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம்" என்ற புதிய சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்ததாகவும், போலி ஆவணங்களை சமர்ப்பித்த அந்த சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்தது ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வந்தன. அந்த வகையில் தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி தமிழக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிக்கப்படும். அனுமதி அளித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்துகளால் காயமடைவோருக்கு சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளிக்கு விடுப்பு எடுக்கக் கூடாது என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications