24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதில் நிலவும் அதிகப்படியான பிழைகளைக் களைந்து, தரவுகளைத் துல்லியமாக்க தமிழக அரசு புதிய தணிக்கை முறையைக் கட்டாயமாக்கியுள்ளது.. மருத்துவமனை, மாவட்டம் மற்றும் மாநில அளவில் உருவாக்கப்படும் இந்தத் தணிக்கைக் குழுக்கள் மூலம், இனி இறப்புச் சான்றிதழ்கள் 24 மணி நேரத்திற்குள் பிழையின்றி பொதுமக்களுக்குக் கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது.. மத்திய சுகாதார ஆராய்ச்சி அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி, இத்திட்டம் இறப்புப் பதிவுகளில் வெளிப்படைத்தன்மையையும், நிர்வாகச் சீரமைப்பையும் கொண்டு வரும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது..!!
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள் பொது சுகாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கும், துல்லியமான புள்ளிவிவரங்களை பெறுவதற்கும் ஆதாரமாகத் திகழ்கின்றன.

இறப்புச் சான்றிதழ் குளறுபடி
இப்போது இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்ய தமிழக அரசு புதிய தணிக்கை முறையை கட்டாயமாக்கியுள்ளது. மருத்துவமனைகளில் பதிவு செய்யப்படும் இறப்பு சான்றிதழ்களில் சுமார் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை விரிவான அரசாணையை வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறையில், மருத்துவமனைகள் இ-மார்க்டாலிட்டி (e-Mortality) சாப்ட்வேர் மூலம் இறப்பு விவரங்களை இணையத்தில் பதிவு செய்கின்றன. இதில் மருத்துவக் காரணங்களை முறையாகக் குறிப்பிடுவதில் குளறுபடிகள் ஏற்படுவதால், மத்திய சுகாதார ஆராய்ச்சி அமைப்புகளான ஐ.சி.எம்.ஆர். (ICMR) மற்றும் என்.சி.டி.ஐ.ஆர். (NCDIR) ஆகியவற்றின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புதிய தணிக்கை முறை உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அதிரடி
இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனை, மாவட்ட மற்றும் மாநில அளவில் மூன்று அடுக்கு தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. முதல் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான குழு செயல்படும். வட்டார மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் அந்தந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர்கள் அல்லது தலைமை மருத்துவ அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த குழுக்கள் மாதம் ஒருமுறை கட்டாயம் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, தரவுகளை சரிபார்க்க வேண்டும். இறப்பு பதிவான 24 மணி நேரத்திற்குள் பிழையற்ற இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்வது இக்குழுவின் பிரதான பொறுப்பாகும். மேலும், மாநில அளவில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
இனி பிழையற்ற இறப்பு சான்றிதழ்
இந்த மாநில அளவிலான குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விரிவான தணிக்கை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு, பதிவுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும்.
இந்த புதிய நடைமுறை மூலம், இறப்புப் பதிவுகளின் தரம் உயருவதோடு, எதிர்காலத்தில் மருத்துவ ஆராய்ச்சிக்கும், அரசு திட்டங்களை வகுப்பதற்கும் துல்லியமான தரவுகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரவுப் பதிவில் கவனக்குறைவாகச் செயல்படும் மருத்துவமனைகள் மீது இந்தத் தணிக்கை முறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்காக இறப்புப் பதிவின் ஒவ்வொரு கட்டத்திலும் மருத்துவர்கள் மற்றும் பதிவுக் clerks-களுக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித அலைச்சலுமின்றி துல்லியமான ஆவணங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.












Click it and Unblock the Notifications