இன்னும் 5 அமாவாசை தான்.. அதுவரைதான் திமுக ஆட முடியும்.. கள்ள ஓட்டை நம்பியுள்ள கட்சி: ஜெயக்குமார்
சென்னை: தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசைதான் உள்ளதால், அதுவரை மட்டும் தான் திமுகவால் ஆட முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் முதல்வருக்கு எஸ்.ஐ.ஆர் என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது என்றும் ஜெயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது...
இந்நிலையில், தமிழகத்தில் நாளை தொடங்க உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி குறித்து சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "திமுக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்திவிட்டு, அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் மார்தட்டி கொள்கிறார். முதலமைச்சருக்கு SIR என்றாலே அலர்ஜிதான். மக்களை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு பொய் பிரச்சாரத்தை அரங்கேற்றியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து மக்களை திசை திருப்பும் வகையில் தவறான பொய் பிரசாரத்தை ஸ்டாலின் மேற்கொள்கிறார்..

இறந்தவர்களுக்கு வாக்குரிமை
இறந்தவர்களுக்கு வாக்குரிமை இருந்து, இருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லாதது ஜனநாயக கேலிக்கூத்து. அதை மாற்றுவதற்காகவே எஸ்.ஐ.ஆரை நாங்கள் வரவேற்கிறோம்.. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையிலும் நியாயம் இருப்பதால் தான் அதிமுக ஆதரிக்கிறது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் வாக்குகளை வாக்களிக்கும் சூழ்நிலை உள்ளது. இதை முறையாக கண்காணிக்கவில்லை.கள்ள ஓட்டு போட்டு பூத்தை கைப்பற்றுவது தான் திமுகவின் வேலை. கள்ள ஓட்டு, இறந்தவர்கள், குடி பெயர்ந்தவர்களை ஆகியோரின் வாக்குகளை நம்பித்தான் திமுக உள்ளது. அதனால்தான் SIR-ஐ கண்டு ஸ்டாலின் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்.
அனைத்து கட்சிகளுக்கும் பாக முகவர்கள் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால் கேள்வி கேட்கலாம், எதிர்த்து முறையிடலாம். வெளிப்படைத்தன்மையோடு, உண்மையான வாக்காளர் பட்டியல் வெளி வருவதற்கு, திமுக ஏன் பயப்பட வேண்டும்?
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வேண்டாம் என்று திமுக சுப்ரீம் கோர்ட் செல்லுமானால், அந்த பணிகள் வேண்டும் என்று அதிமுகவும் உச்சநீதிமன்றத்தை நாடும். மக்களை நம்பாமல் கள்ள வாக்குகளை நம்பியுள்ள திமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் SIR ஆப்பு வைக்க போவதால் திமுகவினர் கொதித்து போய் உள்ளனர்.சிறப்பு திருத்த பணிககள் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்திற்கும் பாஜகவிற்குப் எந்த தொடர்பும் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னுடைய வேலையை செய்கிறது. இதனை குறை சொல்ல முடியாது. பாஜகவிற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.
5 அமாவாசை
அதிமுக, தவெக கூட்டணி குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது. கூட்டணி அமைந்தால் எடப்பாடி பழனிசாமி, விஜய்யை அழித்துவிடுவார் என்ற டிடிவியின் கருத்து அவருடைய சொந்த கருத்தாகும்.. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை உள்ளது, இதில் 2 அமாவாசைக்கு முன்பாக தேர்தல் களம் மாறிவிடும். அதுவரை மட்டுமே திமுகவால் ஆட முடியும். 2 அமாவாசைக்கு முன்பு அரசியலில் மாற்றங்கள் வரலாம்.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் , ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது அதிமுகவை விமர்சித்து வருகிறார். அவர் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். தயவு செய்து எங்களிடம் மோத வேண்டாம். அம்மா மீது பாசம் கொண்டவர்கள் மீது வசைபாடினால் நிச்சயம் வாங்கி கட்டிக் கொள்வீர்கள்.
ஆறு அறிவு உள்ள மனிதனுக்கு சொல் புத்தி, சுயபுத்தி இருக்கும். ஐந்தறிவு கொண்ட கடல் ஆமை, காட்டு மரத்திடம் பேசுபவர்களிடம் நாம் பேச முடியுமா? இல்லாததையெல்லாம் சொல்ல வேண்டாம் சீமானுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications