Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், வியூகங்களும் விதவிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகளில் நடப்பதாக சொல்லப்படும் நிதி விவகாரம் அரசியல் களத்தில் பரபரத்து வருகிறது.. அது என்ன?

அனைத்து கட்சிகள் தரப்பிலும் வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது.. இதில் அதிமுக, தவெக தரப்பில் "தேர்தல் வைப்புத் தொகை" என்ற பெயரில் வேட்பாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன..

10 crore Wealth money power AIADMK TVK DMK Tamil Nadu Assembly Election 2026 TN Election Special 10 2026 10

கொள்கை, மக்கள் சேவை என்பதை தாண்டி, தேர்தல் களம் என்பது பெரும் முதலாளிகளுக்கான ஆடுகளமாக மாறிவருகிறதோ என்ற அச்சத்தை இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது..

எடப்பாடி பழனிசாமி

கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் 10 இடங்களைக் கைப்பற்றி அசைக்க முடியாத பலத்தை அதிமுக நிரூபித்தது.. இந்த முறையும் அதே வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக உள்ளது.. ஆனால், வேட்பாளர் தேர்வில் தற்போது புகுத்தப்பட்டுள்ள 10 கோடி ரூபாய் முன்பணம் என்ற நிபந்தனை உள்ளதாகவும், இது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது..

ஜெயலலிதா காலத்தில் சாதாரண தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு, கட்சித் தலைமையே தேர்தல் செலவுகளை கவனித்துக் கொள்ளும் நடைமுறை இருந்தது..

வசதி படைத்தவர்கள்

ஆனால், இப்போது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற நிலை உருவாகியுள்ளதாக நிர்வாகிகள் புலம்புகிறார்களாம்.. 10 கோடி ரூபாய் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால், விருப்ப மனு அளித்த பல நடுத்தர வர்க்க நிர்வாகிகள் பின்வாங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.. இது கட்சிக்குள்ளேயே ஒருவிதமான பிளவையும், அதிருப்தியையும் விதைத்து வருகிறதாம்.

மறுபுறம், மாற்றத்தை முன்னிறுத்தி அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இதே போன்றதொரு நிதி நெருக்கடியை வேட்பாளர்கள் மீது சுமத்துவதாகத் தெரிகிறது..

முதற்கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் விஜய் தீவிரம் காட்டி வரும் சூழலில், ஒவ்வொரு வேட்பாளரும் சுமார் 5 கோடி ரூபாய் வரை வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது..

தவெகவுக்கு சவால்

திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளின் பணபலத்திற்கு ஈடுகொடுக்க வேண்டும் என்றால், வேட்பாளர்களும் அதே அளவிற்கு செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியதாகவும், இந்த நிபந்தனையானது, தகுதியுள்ள பல புதிய முகம் கொண்ட வேட்பாளர்களை தயங்க வைத்து வருவதாகவும் சோஷியல் மீடியாவில் செய்திகள் வலம் வருகின்றன..

இதெல்லாம் உண்மையா தெரியவில்லை.. ஒருவேளை இந்த தகவல்கள் உண்மையானால், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதே ஒரு சவாலாக இருக்கும் நிலையில், இத்தகைய நிபந்தனைகள் கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

திமுக, அதிமுக, தவெக

இந்த நிதி நெருக்கடி என்பது ஒரு சில கட்சிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.. இது இன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த தேர்தல் கலாச்சாரத்தையே ஆக்கிரமித்துள்ள ஒரு பொதுவான சவாலாக மாறியுள்ளது.. திமுக, அதிமுக மற்றும் தவெக என பிரதானக் கட்சிகள் அனைத்திலும் வெவ்வேறு வடிவங்களில் இத்தகைய நிதிசார்ந்த அழுத்தங்கள் வேட்பாளர்கள் மீது சுமத்தப்படுகின்றன..

திமுக தரப்பை பொறுத்தவரை, தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து பெறப்படும் விருப்ப மனு கட்டணம் என்பது அதிகாரப்பூர்வமாக 25,000 ரூபாய் (பொதுப்பிரிவு) மற்றும் 15,000 ரூபாய் (பெண்கள் மற்றும் தனித்தொகுதி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இது அதிமுகவின் 10 கோடி ரூபாய் விவகாரத்துடன் ஒப்பிடுகையில் வெளிப்படையாக மிகக் குறைவாகத் தோன்றினாலும், கள எதார்த்தம் வேறாக உள்ளது..

கோடி கோடி பணம்

ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில், தேர்தல் செலவுகளை முழுமையாகக் கவனித்துக் கொள்ளக்கூடிய பொருளாதார பின்புலம் கொண்டவர்களுக்கே வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.. திராவிட கட்சிகளின் பலமே அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு மிக்க உள்ளூர் முக்கியஸ்தர்கள்தான் என்பதால், அவர்கள் தேர்தல் களத்தில் கோடிக்கணக்கில் செலவிடத் தயாராக இருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே மாறியுள்ளது.

இந்த நெருக்கடி வெறும் நிதி வசூலோடு முடிந்துவிடவில்லை.. ஒரு வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அதிகாரப்பூர்வ செலவு வரம்பு 40 லட்சம் ரூபாயாக இருந்தாலும், இன்றைய அரசியல் சூழலில் ஒரு தொகுதியில் வெற்றிபெற 5 முதல் 10 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டிய கட்டாயம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கசப்பான உண்மை

இதனால், கொள்கைப் பிடிப்புள்ள சாதாரண தொண்டர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தொழிலதிபர்களும் பணக்காரர்களும் மட்டுமே தேர்தல் அரசியலில் கோலோச்சும் நிலைமை உருவாகிவிடுமோ? என்ற கலக்கம் சூழ்ந்து வருகிறது.. மேலும் பணத்தை மட்டுமே தகுதியாக கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த உண்மையான தொண்டர்களை அந்நியப்படுத்தும்..

தேர்தலுக்கு முன்பே இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடும் வேட்பாளர்கள், வெற்றி பெற்ற பிறகு அதனை ஈடுகட்ட ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவே வாய்ப்புகள் அதிகம்..

அதுமட்டுமல்ல, அரசியலில் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் இத்தகைய கோடி ரூபாய் கலாச்சாரத்தால் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலை கண்டிப்பாக ஏற்படும் என்பதையும் அரசியல் விமர்சகர்கள் கோடிட்டு காட்டுகிறார்கள்.. இது திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும் ஒரு கசப்பான உண்மையாகவே தொடர்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+